

அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி வசிக்கும் வெளிநாட்டினர், தாங்களாகவே சொந்த நாட்டுக்கு திரும்பிச் சென்றால், இலவச விமான டிக்கெட்டுடன் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்வதை ஊக்குவிக்க ‘Project Homecoming’ என்ற புதிய திட்டத்தை அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் மிச்சமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச் சம்பவ பின்னணி இல்லாத நபர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும். முறையான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர், அமெரிக்காவை விட்டு சொந்த நாட்டிற்கு சென்றால் அவர்களுக்கு ஊக்கத் தொகையாக 2,600 டாலர் வழங்கப்படும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.2.15 முதல் ரூ.2.40 லட்சம் வழங்கப்படும்.
மேலும் இவர்களுக்கு இலவசமாக விமான டிக்கெட்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த நாட்டுக்கு செல்ல விருப்பமுள்ள வெளிநாட்டு நபர்கள், CBP Home என்ற மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும். உங்கள் விண்ணப்பத்தை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை பரிசீலனை செய்து, உங்கள் மீது குற்ற சம்பவ வழக்குகள் ஏதும் இல்லையெனில், இலவச விமான டிக்கெட்டுடன் ஊக்கத்தொகையை வழங்குவர்.
குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் கொலம்பியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை இலக்கு வைத்து, அமெரிக்கா இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்காக அந்தந்த நாட்டில் உள்ள அடையாளச் சின்னங்களுடன் கூடிய விளம்பரங்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி இந்தியாவை மையப்படுத்திய விளம்பரத்தில் தாஜ்மஹால் இடம் பெற்றுள்ளது. அமெரிக்க அரசின் கணக்குப்படி, வெளிநாட்டினர் ஒருவரை வலுக்கட்டாயமாக நாடு கடத்த சுமார் 18,245 டாலர் வரை செலவாகிறது. ஆனால் இந்தப் புதிய திட்டத்தின் மூலம், ஒருவரை சொந்த நாட்டுக்கு அனுப்ப வெறும் 5,100 டாலர் மட்டுமே செலவாகும். இதன் மூலம் 3 மடங்குக்கும் மேலான பணத்தை மிச்சப்படுத்த முடியும்.
குற்றப் பின்னணி இல்லாத நபர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். எதிர்காலத்தில் இவர்கள் அமெரிக்காவிற்கு சட்டபூர்வமாக வருவதற்கும் இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டினர் ஒருவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்த பிறகே, CBP Home செயலி மூலம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர், சொந்த நாட்டுக்குத் திரும்ப இதுவொரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. தகுதியானவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.