

தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகையின் போது பொதுமக்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.
சட்டசபை தேர்தலின் போது பாஜக சார்பில் ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி இடம்பெற்று இருந்தது. இதனை நிறைவேற்றும் விதமாக தற்போது இதற்கான அறிவிப்பை வெளியிட்டு ரூ.242 கோடியை ஒதுக்கியுள்ளது டெல்லி அரசு.
இதன்படி தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகையின் போது, டெல்லியில் தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக ஒரு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். 27 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டெல்லியில் ஆட்சியைப் பிடித்த பாஜக, பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது.
டெல்லியில் தற்போது ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.853-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் தற்போது 17.78 லட்சம் ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன.
இதில் தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுதாரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகையின் போது ஒரு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்பட உள்ளது. டெல்லியில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லி மாநில முதல்வர் ரூ.242 கோடி நிதியையும் ஒதுக்கியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் டெல்லியில் சுமார் 4 லட்சத்திற்கும் மேலான தகுதியற்ற ரேஷன் காடுகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகையின் போது, தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் ஒரு சிலிண்டருக்கான தொகை ரூ.853 நேரடியாக வரவு வைக்கப்படும். இந்தத் தொகையை பயன்படுத்தி பொதுமக்கள் ஒரு சிலிண்டரை வாங்கிக் கொள்ளலாம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
மேலும் குழாய் வழியாக இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி வரும் பொது மக்களுக்கும் இதே பலன் கிடைக்கும் என அறிவித்துள்ளார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா.
வடமாநிலங்களில் வருகின்ற மார்ச் 4ஆம் தேதி ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கும் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல் நடப்பாண்டு நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் தீபாவளி பண்டிகைக்கும் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்பட உள்ளது. ஆக மொத்தம் டெல்லி மக்களுக்கு இந்த வருடம் 2 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக கிடைக்கும்.
இந்தத் திட்டம் நடப்பாண்டோடு முடிந்து விடுமா அல்லது அடுத்த வருடமும் தொடருமா என்பது பற்றி எந்த அறிவிப்பையும் டெல்லி அரசு வெளியிடவில்லை.