

நடுத்தர மற்றும் சாமானிய மக்களுக்கு சட்டம், கோர்ட் என்றே ஒருவிதமான தயக்கமும், பயமும் ஏற்படுகிறது. தங்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை எப்படி பெறுவது என்று தயக்கமும், வக்கீல், கோர்ட் என்று போனால் அதிக பணம் செலவாகுமோ என்ற அச்சமும் உள்ளது. இந்நிலையில் நடுத்தர மற்றும் சாமானிய மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு வாட்ஸ்அப் மூலம் இலவசமாக சட்ட உதவி பெறும் வகையில் ‘நியாய சேது’ (Nyaya Setu) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சாமானிய மக்களும் எளிதாக நீதியைப் பெறும் வகையில் , இந்த நியாய சேது சாட்பாட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் உங்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை அரசாங்கமே உங்களுக்கு இலவசமாக வழங்கும். இந்திய அரசு மற்றும் NALSA இணைந்து நலிவடைந்த பிரிவினருக்காக இலவச சட்ட ஆலோசகர் சேவைகளை வழங்கி வருகின்றன.
மேலும் இது இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால், (Ministry of law & justice) ஜனவரி 1, 2026 அன்று தொடங்கப்பட்ட ஒரு இலவச சட்ட ஆலோசகர் (Free legal advisor service) சேவையாகும்.
சட்ட ஆலோசனைகளை அனைவருக்கும், எளிதாகவும் இலவசமாகவும் கிடைக்கச் செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இது சிவில், கிரிமினல் மற்றும் குடும்ப சட்டங்கள் தொடர்பான இலவச சட்ட ஆலோசனைகளை, சாமானிய மக்களுக்கு உடனுக்குடன் வழங்குகிறது. அதாவது சொத்து தகராறுகள், விவாகரத்து வழக்குகள், சிவில் மற்றும் கிரிமினல் பிரச்சனைகள் உட்பட பல்வேறு சட்ட சிக்கல்களுக்குத் தீர்வு வழங்குகிறது. இந்த சேவை சட்ட நுணுக்கங்களை புரிந்துகொள்ளவும், ஆரம்ப ஆலோசனைகளுக்காக வழக்கறிஞர்களுடன் இணையவும் உதவுகிறது.
மத்திய அரசின் இந்த இலவச சட்ட உதவி சேவையை நீங்கள் பயன்படுத்த வேண்டுமென்று அறிந்து கொள்ளலாம்:
நீங்கள் உங்களது போன் வாட்ஸ்அப்பில் 7217711814 என்ற எண்ணைச் சேமித்து, 'Hello' அல்லது 'Hi' என்று அந்த எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்.
வாட்ஸ்அப்பில் 'Hi' என்று மெசேஜ் அனுப்பியவுடன் 'Tele-Law' என்ற பெயரில் தோன்றும். மொபைல் எண் சரிபார்ப்புக்குப் பிறகு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நியாய சேது சாட்போட் ஒரு வழிகாட்டியாக இருந்து மக்களுக்குத் தேவையான சட்டத் தகவல்களைத் துல்லியமாக வழங்கும்.
இதில் உங்களுடைய பிரச்சனைகள் என்னவென்று டைப் செய்தன் மூலம் உடனுக்குடன் உங்கள் கேள்விக்கான சட்ட ஆலோசனைகளைப் பெறத் தொடங்கலாம்.
இந்தத் திட்டம், மக்கள் வழக்கறிஞர்களை அணுகுவதில் இருக்கும் தயக்கத்தையும், சிரமங்களையும் குறைக்க, 'நீதியின் எளிமை'யை நேரடியாக மக்கள் இருப்பிடத்திற்கே கொண்டு வருகிறது.