பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் அரசு பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில், மிக முக்கியமான திட்டமாக இருப்பது தான் மகளிர் இலவச பேருந்து பயண திட்டம். அதாவது, வேலை, படிப்பு போன்ற காரணங்களுக்காக தினமும் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கத்தோடு தமிழக அரசு செயல்படுத்தியது தான் மகளிர் விடியல் பயணம் திட்டம் (Magalir Vidiyal Payanam Scheme).
குடும்ப முன்னேற்றத்திற்காக பெண்கள் வேலைக்கு செல்வது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் பெரும்பாலான பெண்கள் பேருந்து போக்குவரத்தையே நம்பி உள்ளனர்.
நாள்தோறும் பேருந்தில் சென்று வர சம்பாதிப்பதில் பாதியை செலவு செய்ய வேண்டியிருக்கும் பெண்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் பொருளாதார சிரமத்தை போக்க வேண்டும் என்பதற்காகவே, அரசு 2021-ம் ஆண்டு மே மாதம் மகளிர் இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் ஏழை, எளியை பெண்களுக்கு மிகவும் பேருதவியாக அமைந்தது. மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் என்ற பெயரில் செயல்பட்ட இந்த திட்டம், 2023-ம் ஆண்டு 'விடியல் பயணம் திட்டம்' (Vidiyal Payanam Thittam) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் 2021-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை சுமார் 482.34 கோடி மக்கள் பயணம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.1,600 கோடி வரை போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதாவது, இத்திட்டம் மலைப் பகுதியிலும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில, மலைப்பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தி, அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மற்றும் அவருடன் வரும் ஒரு துணையாளர் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின உரையில் முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.