

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), 'எவரெஸ்ட் ஃபுட் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்' (Everest Food Products Pvt Ltd) மற்றும் 'லால்ஜி கோதூ அண்ட் கம்பெனி' (Laljee Godhoo and Company) ஆகிய முன்னணி நிறுவனங்களின் கூட்டுப் பெருங்காயத் தூள் (hing powder) தயாரிப்புகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றை விற்பனை செய்யத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வகச் சோதனையில் இந்த நிறுவனங்களின் பெருங்காயத் தூள் தயாரிப்புகள் தரமற்றதாக மற்றும் தவறான முத்திரையிடப்பட்டவை என தெரியவந்ததால் அவற்றின் மீது தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக FSSAI தெரிவித்துள்ளது.
குறிப்பாக 'எவரெஸ்ட்' நிறுவனத்தைப் பொறுத்தவரை, கலப்புப் பெருங்காயத் தூள் (compounded asafoetida) வகைகளின் விற்பனையை FSSAI உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை செய்துள்ளது.
பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் தரமற்றவை மற்றும் தவறான பெயரிடப்பட்டவை என கண்டறியப்பட்டன. எவரெஸ்ட் பெருங்காயத் தூள் மாதிரிகளில், இருக்க வேண்டிய குறைந்தபட்ச 5 சதவீத ஆல்கஹாலில் கரைக்கூடிய சாறின் அளவு(Alcohol-soluble extract), 3% மட்டுமே இருந்தது. அதேபோல் மஞ்சள் கலவை பெருங்காய தூளில் 3.29 சதவீதமும், கருப்பு கலவை பெருங்காயத் தூளில் 4.4 சதவீதமும், ஆல்கஹால் சாறு மட்டுமே பதிவானதால், இவையும் தரமற்றவை என கண்டறியப்பட்டன. ஆனால், உணவு பாதுகாப்பு 2011-ன் விதிகளின்படி இது குறைந்தபட்சம் 5% இருக்க வேண்டும். இதன் மூலம், தயாரிப்பில் தேவையான அளவு அசல் பெருங்காயம் சேர்க்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
FSS சட்டம், 2006-ன் கீழ் உரிமம் பெற்ற தரமான தயாரிப்புகளை விற்பனை செய்வதை உறுதி செய்யவும், தரமற்ற கலப்பு பெருங்காயத்தை (Compounded Hing/Asafoetida) தொடர்ந்து விற்பனை செய்யும் முறையற்ற நடைமுறையைச் சரிசெய்யவும் ஒரு செயல் திட்டத்தைச் சமர்ப்பிக்குமாறு ஒழுங்குமுறை ஆணையம் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் மேலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
எவரெஸ்ட் நிறுவனத்தின் எக் கறி மசாலா (Egg Curry Masala), சிக்கன் மசாலா (Chicken Masala), மற்றும் கரம் மசாலா (Garam Masala) ஆகியவற்றிலும் லேபிளிங் மற்றும் தரம் சார்ந்த விதிமீறல்கள் (உப்பின் அளவு 5% மேல் இருப்பதை குறிப்பிடாதது) கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும், தடை உத்தரவு பெருங்காயத் தூளுக்கு மட்டுமே பொருந்தும்; மற்ற மசாலாக்களுக்கு ஒட்டுமொத்த தடை விதிக்கப்படவில்லை.
'லால்ஜி கோதூ' (Laljee Godhoo) நிறுவனத்தைப் பொறுத்தவரை, FSSAI விதிமுறைகளை மீறி தரமற்ற மற்றும் கலப்படம் செய்யப்பட்ட பெருங்காயப் பொடியை விற்பனை செய்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனம் அப்பொருளை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டதாக FSSAI தெரிவித்துள்ளது.
"கலப்பு பெருங்காயத்தின் (பொடி மற்றும் கட்டி வடிவம்) மாதிரிகள் தரமற்றவையாகவும், FSS (உணவுப் பொருட்கள் மற்றும் உணவுச் சேர்க்கைகள்) விதிமுறைகள், 2011-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட தேவைகளுக்கு இணங்காதவையாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.
அதாவது, எல்.ஜி நிறுவனத்தின் கச்சா பெருங்காயத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட (1%) அதிகமாக, அதாவது 15% முதல் 32% வரை ஸ்டார்ச் (Starch - மாவுச்சத்து) கலந்திருப்பது கண்டறியப்பட்டது. எனவே அதன் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் ஏற்கனவே விற்பனைக்கு இருக்கும் தரம் குறைந்த பெருங்காயப் பொடிகளை நிறுவனங்கள் தாமாக முன்வந்து திரும்பப் பெற (Voluntary Recall) அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டு நிறுவனங்களும் இந்த விதிமீறல்களுக்கு விளக்கம் அளிக்கவும், தரத்தை சரிசெய்வதற்கான திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை (Corrective Action Plan) சமர்ப்பிக்கவும் FSSAI உத்தரவிட்டுள்ளது.
நிறுவனங்கள் தரக் கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வரை இந்த விற்பனைத் தடை அமலில் இருக்கும் என்று தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சமீபத்தில் அனலாக் பன்னீர் (Analogue Paneer), SDP இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நெய், வண்ண அப்பளம், சில முக்கிய மதுபானங்கள் மற்றும் டாபர் (Dabur) நிறுவனத்தின் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை மற்றும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது எவரெஸ்ட், எல்ஜி பெருங்காயத்தூளுக்கு தடை விதித்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.