#BIG NEWS : "மூலிகைகளின் அரசன்" அஸ்வகந்தாவிற்கு திடீர் தடை! காரணம் இது தான்..!

ஆயுர்வேதத்தில் 'மூலிகைகளின் அரசன்' என்று அழைக்கப்படும் அஸ்வகந்தாவை பயன்படுத்த FSSAI எனப்படும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடைவிதித்துள்ளது.
Ashwagandha, FSSAI
Ashwagandha, FSSAIimage credit-health-clevelandclinic-org.translate.goog
Updated on

ஆயுர்வேதத்தில் 'மூலிகைகளின் அரசன்' என்று அழைக்கப்படும் அஸ்வகந்தா (Withania somnifera) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலிகையாகும். இது உடலை வலுப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைத்து, நீண்ட ஆயுளை வழங்கவும் உதவும் ஒரு 'ரசாயன' (Rejuvenator) மருந்தாகக் கருதப்படுகிறது.

இது முதன்மையாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் அரியானா போன்ற மாநிலங்களில் உள்ள வறண்ட, துணை வெப்பமண்டலப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது; ஏறக்குறைய 10,780 ஹெக்டேர் நிலப்பரப்பில் இதன் சாகுபடி நடைபெறுகிறது. இதில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 5,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலம் இப்பயிருக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆயுஷ் அமைச்சகம் சுட்டிக்காட்டிய பாதுகாப்புச் சார்ந்த கவலைகளின் காரணமாக, ‘அமுக்கரா கிழங்கு’ என்று அழைக்கப்படும் அஸ்வகந்தா இலைகள் மற்றும் அவற்றின் சாறுகளைப் பயன்படுத்துவதற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தடை விதித்துள்ளது.

அஸ்வகந்தா செடியின் வேர்களை மட்டுமே ஆரோக்கியம் சார்ந்த துணை உணவுகளில் (wellness supplements) பயன்படுத்த அனுமதி உள்ளதென்றும், விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளதென்றும் FSSAI தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஜனவரி 1 முதல் புதிய விதிமுறை: குடிநீர் பாட்டுலுக்கு FSSAI கொண்டு வந்துள்ள முக்கிய மாற்றம்..!
Ashwagandha, FSSAI

அஸ்வகந்தா இலைகளைக் கொண்ட பொருட்களைத் தயாரிப்பது, விற்பது அல்லது இறக்குமதி செய்வது சட்டவிரோதமானது என்று அது கூறியுள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள அத்தகைய பொருட்களை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

உணவு வணிக நிறுவனங்கள் விதிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறு FSSAI அறிவுறுத்தியதுடன், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது 'உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006'-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

அஸ்வகந்தா வேர்கள் மற்றும் அவற்றிலிருந்து எடுக்கப்படும் சாறு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

ஏனெனில் அஸ்வகந்தா இலைகளில் அதிக செறிவுள்ள வினைத்திறன் கொண்ட சேர்மங்கள், குறிப்பாக விதஃபெரின்-ஏ(withaferin-A), கண்டறியப்பட்டுள்ளன. இது அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி உடலுக்குள் சென்றால், கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

ஐஸ்லாந்து, ஜெர்மனி மற்றும் இந்தியாவின் சமீபத்திய அறிவியல் ஆய்வுகளின்படி, அஸ்வகந்தா சப்ளிமெண்ட்ஸ் பயன்படுத்திய சிலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

மேலும் மருத்துவர்கள் பொதுவாக கர்ப்ப காலத்தில் இதை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு நோயாளிகளுக்கு அறிவுறுத்துகிறார்கள், ஏனெனில் இது வரலாற்று ரீதியாக தன்னிச்சையான கருச்சிதைவுடன் தொடர்புடையது என்று அறியப்படுகிறது. சுயத் தடுப்பாற்றல் நோய்கள் (Autoimmune diseases) அல்லது தைராய்டு பிரச்சினைகள் உள்ளவர்களும் அஸ்வகந்தாவைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அஸ்வகந்தா, மயக்க மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தியை ஒடுக்கும் மருந்துகள் (immunosuppressants), மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது தைராய்டு பிரச்சனைகளுக்கான மருந்துகள் போன்றவற்றுடன் இடைவினை புரியக்கூடும். வயிறு உபாதை, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் போன்ற சில லேசான பக்க விளைவுகள் ஏற்படலாம்.

மறுபுறம், அஸ்வகந்தா வேர்களுடன் ஒப்பிடும்போது இலைகள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதன் காரணமாக, இந்தத் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் சில நிறுவனங்கள் லாபத்திற்காக, வேர்களுக்குப் பதிலாக மலிவான இலைகளையும் அதன் சாறுகளையும் சேர்ப்பதை அரசாங்கம் கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ள FSSAI, அஸ்வகந்தா இலைகளை மூலப்பொருளாகவோ, சாறாகவோ அல்லது வேறு எந்த வடிவத்திலோ பயன்படுத்துவதற்கு, மேற்கூறிய விதிமுறைகளின் கீழ் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.

ஆயுர்வேத நூல்களும் உட்கொள்வதற்கு வேர்களை மட்டுமே பரிந்துரைக்கின்றன, இலைகளை வெளிப்புறப் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அஸ்வகந்தா பொருள் தயாரிப்பு லேபிள்களில் பயன்படுத்தப்பட்ட தாவரத்தின் குறிப்பிட்ட பகுதியைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை, Himalaya Wellness, Dabur India, Patanjali Ayurveda, Baidyanath மற்றும் Zandu (Emami) போன்ற பல்வேறு வகையான அஸ்வகந்தா தயாரிப்புகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களைப் பாதிக்கக்கூடும்.

அஸ்வகந்தா பொருட்களை வாங்கும்போது, ​​அதன் உறையில் 'அஸ்வகந்தா வேர் சாறு' என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை நுகர்வோர் சரிபார்க்க வேண்டும், 'அஸ்வகந்தா சாறு' என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தால் அதில் இலைகள் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று FSSAI அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
'அஸ்வகந்தா' பெயர் காரணம் தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
Ashwagandha, FSSAI

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அஸ்வகந்தாவின் தேவை அதிகரித்து வருகிறது. அங்கு இது காப்ஸ்யூல்கள், தேநீர் கலவைகள் மற்றும் செறிவூட்டப்பட்ட பானங்கள் வடிவில் விற்கப்படுகிறது. இந்தியாவில், இது பெரும்பாலும் ஆண்களுக்கு வலிமை, ஆற்றல் மற்றும் பாலியல் ஆரோக்கியத்திற்கான ஒரு இயற்கை ஊக்கியாக, குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன் (Testosterone)அளவை அதிகரிப்பதற்காக சந்தைப்படுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com