

ரெயில்களில் திருட்டுச் சம்பவங்களை அரங்கேற்றுவதற்காக, வேலையில்லாத இளைஞர்களை ஒரு குறிப்பிட்ட மாதச் சம்பளத்திற்குப் பணியமர்த்திய ஒரு கும்பலை சேர்ந்த 3 பேரை ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) கைது செய்துள்ளது.
சமீபகாலமாக நாட்டில் பல்வேறு வகையான மோசடிகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. காவல்துறையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும் மோசடிகள் குறைந்த மாதிரி இல்லை. புதுப்புது வகையான மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது. அதாவது ரெயிலில் பயணிக்கும் பயணிகளிடம் திருவதற்கு இளைஞர்களுக்கு மாத சம்பளம் கொடுத்து ஒரு கும்பல் வழிநடத்தி வந்திருக்கிறது. திருடுவதற்கு கூட மாத சம்பளமா? என்று ரெயில்வே காவல்துறையினரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஓடும் ரெயில்களில் சமீபகாலமாக பயணிகளின் உடைமைகள் திருட்டு போவதாக புகார்கள் குவித்த வண்ணம் இருந்தது. இதையடுத்து திருடர்களை பிடிக்க ரெயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடி வேட்டையை தொடங்கினர்.
இந்த சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமாக நாக்பூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பீகாரை சேர்ந்த கைலாஷ் தாஸ்(வயது 42), சத்தீஷ்கரை சேர்ந்த மிதிலேஷ்(29) மற்றும் கிஷன் நிஷாத்(22) என்பது தெரியவந்தது. இவர்கள் ரெயிலில் பயணிகளின் உடைமைகளை திருடும் கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியானது. அதாவது பீகாரை சேர்ந்த ஒருவர், வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து தனது கும்பலில் சேர்த்துள்ளார். அவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை நிலையான வருமானம் கிடைக்கும் என்று அந்தக் குழு இளைஞர்களுக்கு ஆசை காட்டி, வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
இவர்கள், குறிப்பாக உறங்கிக் கொண்டிருந்த பயணிகளைக் குறிவைத்து, செல்போன்கள், பணம் மற்றும் நகைகள் போன்ற பொருட்களைத் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
வேலைக்கு அமர்த்தப்பட்ட இளைஞர்கள், திருட்டுச் சம்பவங்களைச் செய்வதற்காக பல்வேறு ரெயில் வழித்தடங்களில் பணியமர்த்தப்பட்டனர். பின்னர், திருடப்பட்ட பொருட்களை கும்பலின் முக்கிய நபர்களிடம் ஒப்படைக்குமாறு அவர்கள் பணிக்கப்பட்டனர்.
ஓடும் ரெயில்களில் பயணிகளுக்கு தெரியாமல் அவர்களது உடைமைகளை எப்படி திருடுவது, யாரிடமும் சிக்காமல் எப்படி தப்பிப்பது என்பது குறித்து அவர்களுக்கு அந்த கும்பல் தலைவன் சிறப்பு பயிற்சி அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
நாக்பூர், பிலாய், ராய்கர் மற்றும் பிலாஸ்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த கும்பல் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை குறிவைத்து ஒரு அமைப்பாக செயல்பட்டு வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கைதான 3 பேரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் தலைமறைவாக உள்ள இந்தக் கும்பலின் மூளையாகச் செயல்பட்டவரும், ககாரியாவைச் சேர்ந்தவருமான கும்பல் தலைவனை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கும், திருடப்பட்ட பொருட்களை மீட்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.