

ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தில், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளை, தொலைதூர கிராமப்புறங்களிலிருந்து அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல, மாவட்ட நிர்வாகம் 'நிரிக்யான சதி' (Nirikhyana Sathi) என்ற புதிய இலவச ஆட்டோ ரிக்ஷா ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக மலை பிரதேசம் மற்றும் ஒதுக்குப்புற கிராமங்களில் இருந்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் ஒரு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை அருகிலுள்ள சுகாதார மையங்களுக்கு ஏற்றி செல்வதற்காக இலவச ஆட்டோ ரிக்ஷா சேவையை தொடங்கியுள்ளது.
‘நிரிக்யானா சாத்தி’ எனும் இந்த திட்டத்தை கஞ்சம் மாவட்ட கலெக்டர் வி.கீர்த்தி வசன் மங்கல்பூர் கிராமத்தில் தொடங்கி வைத்தார். இந்த சேவைகளுக்கான கட்டணத்தை செஞ்சிலுவை சங்க (Red Cross) நிதியிலிருந்து மாவட்ட நிர்வாகம் நேரடியாக ஏற்கும்.
கர்ப்பிணிகள் மற்றும் ஆஷா (ASHA) பணியாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்களின் வாட்ஸ்அப் எண்களைத் தொடர்புகொண்டு இந்த சேவையைப் பெறலாம்.
இது கர்ப்பிணி பெண்களுக்கு இலவச அல்ட்ராசவுண்ட் பரிசோதனை வசதிகளை ஏற்படுத்துவதற்காக 2023-ல் கஞ்சம் மாவட்ட நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட ‘நிரிக்யானா’ திட்டத்தின் நீட்சியாகும். இந்தத் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷாக்கள், கர்ப்பிணிப் பெண்களை இலவச அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகளுக்காக மூன்று முறையும், இறுதியாக பிரசவத்திற்காகவும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும்.
நிரிக்யானா திட்டத்தின் கீழ், கர்ப்பிணிப் பெண்கள் அல்ட்ராசவுண்ட் உள்ளிட்ட முக்கியப் பரிசோதனைகள் குறித்த அறிவிப்புகளைப் பெறுவதற்காக ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு கடந்த ஆண்டு ஸ்கோச் விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவைகளுக்காக 12 வட்டாரங்களில் உள்ள மொத்தம் 247 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பணிக்காக சுமார் 100 ஆட்டோக்கள் ஈடுபடுத்தப்படும் என மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது போன்ற ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவைகள், சாலை வசதி இல்லாத அல்லது ஆம்புலன்ஸ் சென்றடைய முடியாத கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.