

இந்தியாவின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களான இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு அதிரடியாக போனஸ் அறிவித்து ஊழியர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால் ஐடி துறை கடுமையாக பாதிக்கப்பட்டு , அதன் வேலைவாய்ப்புகளை பெரும் அளவில் இழந்து வருகிறது. ஐடித்துறையில் பெரும் சரிவு ஏற்படும் என்று சர்வதேச அளவில் கணிப்புகள் வெளியான நிலையில் , இந்த போனஸ் ஐடி ஊழியர்களின் மத்தியில் பெரிய உற்சாகத்தை கொண்டு வந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக தகவல் தொடர்பு துறையில் நிலவி வந்த நிலையற்ற வேலைவாய்ப்பு பயத்திற்கு பிறகு, தற்போது அவர்களின் வாழ்க்கையில் மீண்டும் வசந்த காலம் தொடங்கியுள்ளது. மேலும் ஆந்த்ரோபிக் போன்ற நிறுவனங்களின் வருகை இந்தியாவின் ஐடி சேவைகளுக்குச் சவாலாக இருந்தது. ஆயினும் இவற்றையெல்லாம் சமாளித்து, இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்கள் தங்களின் கடினமான சூழல்களிலும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது, இந்திய ஐடி துறையின் நம்பகத் தன்மையை வெளிப்படுத்துகிறது.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனங்களான இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ தங்களது ஊழியர்களுக்கான காலாண்டு போனஸ் (Variable Pay) விவரங்களை வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்கான (Q3FY26) போனஸ் தொகையை 85% ஆக உயர்த்தி உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த அளவிற்கு இன்போசிஸ் நிறுவனம் தங்களின் ஊழியர்களுக்கு போனஸை உயர்த்தியது இல்லை. இந்த போனஸ் குறிப்பாக இளைய நிலை மற்றும் நடுத்தர நிலையில் உள்ள ஊழியர்களுக்கு பெரும் ஆதரவாக இருக்கும். இதற்கு முன்னர் இந்த தொகை 65% முதல் 80% வரை இருந்தது. இந்த தொகை பிப்ரவரி மாத சம்பளத்துடன் சேர்த்து ஊழியர்களின் வங்கியில் கணக்கில் செலுத்தப்படும்.
இன்ஃபோசிஸைத் தொடர்ந்து இந்தியாவின் மற்றொரு முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனமும் தனது பங்கிற்கு ஊழியர்களுக்கு போனஸை அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு
80% முதல் 85% வரை போனஸ் வழங்க முடிவு செய்துள்ளது. அதிலும் ஒரு சில பிரிவுகளில் வேலை செய்பவர்களுக்கு 90% வரை போனஸ் தொகையை உயர்த்தி கொடுக்க முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் லாபம் சமச்சீராக இருப்பதாலும் புதிய திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதாலும் இந்த தொகையை வழங்குகிறது. விப்ரோ தேவையற்ற செலவுகளை குறைத்து லாபத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.
பெரிய இடைவெளிக்குப் பிறகு ஐடி நிறுவன ஊழியர்களுக்கு கிடைத்துள்ள இந்த போனஸ் உயர்வு, வர இருக்கும் மாதங்களில் இந்திய பொருளாதாரத்திற்கு சற்று சாதகமாக அமையும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் ஆன்லைன் மற்றும் பொது சந்தைகளில் விற்பனை நுகர்வோர் அதிகரிக்கும் என்று கருதுகின்றனர். இந்த இரண்டு நிறுவனங்களின் போனஸ் உயர்வு மற்ற ஐடி நிறுவனங்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும் . இது இந்தியாவின் மற்ற முன்னணி ஐடி நிறுவனங்களான TCS உள்ளிட்ட நிறுவனங்களையும் போனஸ் தரக் கூடிய சூழலுக்கு கொண்டு செல்லும். எப்படியோ ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.