

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள், வங்கிகளில் கடன் வாங்குவது இயல்பாகி விட்டது. தனிநபர் கடன் முதல் வீட்டுக் கடன் வரை அனைத்து கடன்களும் வங்கிகளில் வழங்கப்பட்டு வருகின்றன. மாதந்தோறும் தவணை முறையில் கடன் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடன் தொகையை சரியாக செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதோடு கடன் தொகையை சரியாக செலுத்தாத பட்சத்தில் கிரெடிட் ஸ்கோர் குறைவது மட்டுமின்றி அடுத்தடுத்து கடன்கள் பெறுவதிலும் சிக்கல் ஏற்படும்.
மேலும் வாடிக்கையாளர்கள் கடனை திரும்ப செலுத்துமாறு வங்கிகள் சார்பிலும், வங்கிகளால் நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் சார்பிலும் அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் கடன் வசூல் செய்வதில் புதிய வழிமுறைகளை கொண்டு வந்துள்ளது ரிசர்வ் வங்கி.
சில சமயங்களில் கடன் வசூல் செய்யும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் அத்துமீறி நடப்பதாகவும் தகாத முறையில் பேசுவதாகவும் புகார்கள் தொடர்ந்து எழுந்தன. இதனை முறைப்படுத்தும் விதமாக இந்தியன் ரிசர்வ் வங்கி தற்போது ஒரு புதிய நடைமுறையை கொண்டு வரவுள்ளது. இதன்படி காலை 8 மணிக்கு முன்பாகவும் மாலை 7 மணிக்கு பின்னாலும் கடந்தொகை கேட்டு கால் செய்யக்கூடாது என ரிசர்வ் வங்கி கொண்டு வரவுள்ளது.
இந்த புதிய நடைமுறை வருகின்ற ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. கடன் தொகையை வசூல் செய்யும் கடன் ஏஜென்ட் நிறுவனங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.
இதன்படி இனி கடன் வசூல் செய்யும் நிறுவனங்கள், வாடிக்கையாளரிடம் முறைப்படி நடந்து கொள்ள வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள்:
* கடன் வாங்கியவரை தவிர அவரது வீட்டினர் யாரையும் வசூல் நிறுவனங்கள் தொந்தரவு செய்யக்கூடாது.
* வாடிக்கையாளர்கள் எங்கு வர சொல்கிறார்களோ அங்கு தான் அவர்களை சந்திக்க வேண்டும். மாறாக வேறொரு இடத்திற்கு வர சொல்ல கூடாது.
* வாடிக்கையாளர்களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்த்து, இனி கவுரவமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* கடன் கேட்கும் போது வாடிக்கையாளர்கள் மிரட்டக்கூடாது.
* வாடிக்கையாளர்களிடம் கடன் கேட்டு கால் செய்யும் நேரமும் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
* இனி காலை 8 மணிக்கு முன்பாகவும் மாலை் 7 மணிக்கு பின்பாகவும் கால் செய்யக்கூடாது.
* ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ரிசர்வ் வங்கி இந்த புதிய வழிகாட்டு நறுமுறைகள் கடன் வாங்கியவர்களுக்கு ஒரு புதிய நிம்மதியை அளித்துள்ளது. இருப்பினும் கடன் கேட்பதில் புதிய நெறிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் அதுவரை காத்திருக்காமல் விரைந்து கடனை திருப்பி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
நிதி நிர்வாகத்தில் வாடிக்கையாளர்கள் சிறந்து விளங்கினாலே, கடன் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து விடலாம்.