உலக அளவில் பெரும்பாலான மக்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் சௌகரியத்திற்கு ஏற்ப அவ்வப்போது பல்வேறு புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் வழியாகவே பிரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். இதன் காரணமாக பயனர்கள் இனி ரீசார்ஜ் செய்ய அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை.
இதற்கு முன்பாக வாட்ஸ்அப் வழியாக மின் கட்டணம் செலுத்துதல், பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த வரிசையில், அடுத்தடுத்து புதுப்புது அப்டேட்டுகளை பயனர்களுக்கு இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
வாட்ஸ்அப் மூலம் பிரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் சேவையானது, படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக Android மற்றும் IOS சாப்ட்வேர் மொபைல்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
வெகு விரைவில் அனைத்துப் பயனாளர்களுக்கும் இந்த வசதி பரவலாக கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப் மூலம் ரீசார்ஜ் செய்யும் வசதி அறிமுகத்திற்கு வந்திருப்பதன் மூலம், இந்த வசதியைப் பயன்படுத்த யுபிஐ லாகின் செய்வது அவசியம்.
வாட்ஸ்அப்பில் பணப்பரிமாற்ற வசதி கொண்டு வரப்பட்டாலும், பயனர்கள் இந்த வசதியை அவ்வளவாக பயன்படுத்தவில்லை. மாறாக GPay, Phonepe உள்ளிட்ட செயலிகளையே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வாட்ஸ்அப் யுபிஐ சேவையை பயனர்கள் அதிகளவில் பயன்படுத்த ஊக்குவிக்கும் விதமாக தான் தற்போது ரீசார்ஜ் சேவையை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப்பில் ரீசார்ஜ் சேவையை பொதுமக்கள் பயன்படுத்தினால், GPay மற்றும் Phonepe-வின் பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
தற்போது பொதுமக்கள் ரீசார்ஜ் கடைகள் மற்றும் ஆன்லைன் யுபிஐ செயலிகள் வழியாகவே ரீசார்ஜ் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பில் ரீசார்ஜ் வசதி அறிமுகப்படுத்துவது, பலருக்கும் எளிதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இருப்பினும் இந்த வசதிக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பது இனி தான் தெரிய வரும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் அரசு சான்றிதழ்களை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சாட்டிங் செயலியில் பல்வேறு பயனுள்ள வசதிகள் கிடைப்பது பயனர்களுக்கு பலன் தரக் கூடியதே.