
தமிழக அரசு பெண்களுக்கு உதவும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடன் உதவி, மானியங்கள், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் இதில் அடங்கும். அந்த வகையில் தொடங்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் (Self-Help Groups) என்பவை ஒரே பகுதியிலுள்ள பெண்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முன்னேற்றம் அடைய ஒன்றிணைந்து செயல்படும் ஒரு குழுவாகும். இக்குழுக்கள் தங்கள் உறுப்பினர்களுக்குள் சேமிப்பு மற்றும் கடன்களைப் பகிர்ந்துகொண்டு, வருமானம் ஈட்டும் தொழில்களில் ஈடுபட்டு, வறுமையை ஒழித்து, சமூக அதிகாரமளிப்பை உறுதி செய்கின்றன.
‘சேமிப்பு, கடன் மற்றும் காப்பீடு’ ஆகியவை நிலைத்த வாழ்வாதாரத்திற்கும், வறுமையை குறைக்கவும் இன்றியமையாததாகும். இச்சேவைகள் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க சுய உதவி குழுக்கள் மிகவும் அவசியம் ஆகும்.
1989-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் தலைமையில் கருணாநிதி மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டது. அவர் போட்ட விதைதான் இன்று மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்துள்ளது.
தமிழகத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் ஏழைகளின் வறுமையை ஒழிக்க சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 39 சுய உதவிக் குழுக்கள் கிராமப்புறங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 4.76 லட்சம் சுய உதவிக் குழுக்களில் சுமார் 54 லட்சம் பெண்கள் உள்ளனர்.
ஏழைப் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில், சுய உதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தற்போது அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 60 லட்சம் பெண்கள் பயன் பெறுவார்கள். இந்த அட்டையின் மூலம் பெண்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.
சேலத்தில் நடந்த மகளிர் சுய உதவி குழுக்களின் வங்கி கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,500 கோடி வங்கிக் கடன் இணைப்புகளையும், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார். அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள சுமார் 60 லட்சம் பெண்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. 9 மாதங்களில் அனைத்து பெண்களுக்கும் அடையாள அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கியது தமிழக அரசு தான். இந்த அடையாள அட்டை வைத்திருக்கும் பெண்களுக்கு சில சலுகைகள் உண்டு.
இந்த அட்டையில் உறுப்பினர் பெயர், மகளிர் சுய உதவிக் குழு பெயர், பிறந்த தேதி, ரேசன் அட்டை எண், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட எண், இரத்த வகை, முகவரி, தொடர்பு எண் மற்றும் க்யூ ஆர் கோடு ஆகியவை அதில் இருக்கும்.
இனிமேல் மகளிர் சுய உதவிக் குழுக்களுடைய தயாரிப்புகளை அரசு பஸ்களில் 100 கிலோமீட்டர் வரை கட்டணம் இல்லாமல் எடுத்து செல்லலாம். இதன் மூலம் இவர்கள் அரசு பேருந்துகளில் 25 கிலோ வரை அவர்களது தயாரிப்பு பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம். இதனால் அவர்களின் லக்கேஜ் சார்ஜ் மிச்சமாவதுடன் அவர்களுக்கு கிடைக்கும் லாபமும் அதிகமாகும்.
இந்த அடையாள அட்டை மூலமாக ஆவின், முதல்வர் மருந்தகம் உள்ளிட்ட பல இடங்களில் சலுகைகள் உண்டு. கோ-ஆப்டெக்ஸில் துணிகள் வாங்கும்போது 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வழங்கும் கடன் உதவி திட்டங்களில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதையெல்லாம் அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.