

இந்தியாவில் பெரும்பான்மையான குடும்பங்கள் சமையலுக்காக எல்பிஜி சிலிண்டர்களைப் பயன்படுத்துகின்றன. அதன்படி நாட்டில், சுமார் 33 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் எல்பிஜி (LPG) சிலிண்டர் இணைப்பை பெற்றுள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த சமையல் எரிபொருள் தேவையில் 87% வீடுகளின் பயன்பாட்டையே சார்ந்துள்ளது. நகர்ப்புறங்களில் பெரும்பாலானோர் சமையலுக்கு எல்பிஜியை முழுமையாக நம்பியுள்ளனர், கிராமப்புறங்களிலும் இதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உஜ்வாலா போன்ற பல திட்டங்கள் நாட்டின் மூலைமுடுக்கெங்கும் எல்பிஜி சிலிண்டர் இணைப்பை கொண்டு சேர்த்துள்ளன. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டம் மூலமாக, ஏழை எளிய கிராமப்புறக் குடும்பங்களுக்கு விலையில்லா சமையல் எரிவாயு (LPG) இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இதுவரை கோடிக்கணக்கான பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், இறக்குமதிச் செலவைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவுமே குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகளைத் தீவிரமாக ஊக்கப்படுத்தி வருகிறது. இது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மலிவான மற்றும் பாதுகாப்பான மாற்றாகும்.
மத்திய கிழக்கில் பதற்றம் குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, உலகளவில் கச்சா எண்ணெய் விலை எகிறியுள்ளது. போர் தொடங்கும் முன் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 70 அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால் தற்போது 100 அமெரிக்க டாலரை நெருங்கிவிட்டது. இது உலகளாவிய பொருளாதாரத்தில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தலாம். கச்சா எண்ணெய் விலை உயர்வு மட்டுமின்றி போர் நீண்ட நாள்களுக்கு தொடரும்பட்சத்தில், இந்தியா போன்ற நாடுகளில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் தட்டுபாடு ஏற்படுவும் அதிக வாய்ப்புள்ளது.
இந்தியாவை பொருத்தவரை தற்போதைய சூழலில், LPG தான் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது. வணிக ரீதியான LPG சிலிண்டருக்கு நாடு முழுவதும் கடும் தட்டுபாடு நிலவுகிறது.
எல்பிஜிக்கு நாம் வெளிநாடுகளை சார்ந்திருப்பதால் தான் இந்த பிரச்சினை. இதுவே பிஎன்ஜி என்றால் நம் நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது எனவே அதன் விநியோகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.
LPG தட்டுபாடு ஏற்படாமல் தடுக்க, வீட்டு உபயோக எல்பிஜி (LPG) இணைப்பிலிருந்து குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) பயன்பாட்டிற்கு மாறும்படி மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதன்படி, நாட்டின் ஒட்டுமொத்த PNG இணைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி LPG இணைப்பில் இருந்து 1.25 பேர் PNG இணைப்புக்கு மாறியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசின் அறிவிப்பு மற்றும் சிலிண்டர் வினியோக தாமதம், விலை உயர்வு போன்ற காரணங்களால் பெரும்பாலான மக்கள் எல்பிஜியில் இருந்து பிஎன்ஜிக்கு மாற தொடங்கி உள்ளனர். பிஎன்ஜி (பிஎன்ஜி எரிவாயு) என்பது வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை விநியோகம் செய்வதாகும்.
எல்பிஜியை விட பிஎன்ஜி அதிக பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. குறிப்பாக எல்பிஜி சிலிண்டர்களை (LPG) விடக் குழாய் எரிவாயு விலை குறைவு.
சமையல் எரிவாயு தீர்ந்துவிடுமோ என்ற கவலை தேவையில்லை. எப்போதுமே எரிவாயு கிடைக்கும். எல்பிஜி சிலிண்டர்களை விட இது மிகவும் பாதுகாப்பானது. காற்றில் எளிதில் கரையும் தன்மை கொண்டது. குறைவான நச்சுப் புகையை வெளியிட்டுச் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருக்கும்.
குறிப்பாக இத்துடன் மீட்டர் ஒன்றை பொருத்துவார்கள், அதில் எவ்வளவு பயன்படுத்தி இருக்கிறோம் என்பதை பொறுத்து மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதும் என்பதால் மாதந்தோறும் எல்பிஜி சிலிண்டருக்கு ஒரு பெரிய தொகை செலவிடுவதை தவிர்க்க முடியும்.
குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) பயன்பாட்டை விரைவுபடுத்தும் நோக்கில், வீட்டு உபயோகத்திற்கான குழாய் வழி எரிவாயு கட்டமைப்பை விரிவுபடுத்தும் நகர எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு அரசு கூடுதல் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், புதிதாக வழங்கப்படும் ஒவ்வொரு வீட்டு உபயோக PNG இணைப்புக்கும் 200 ஸ்டாண்டர்ட் கியூபிக் மீட்டர் (SCM) அளவிலான குறைந்த விலை உள்நாட்டு இயற்கை எரிவாயு வழங்கப்படும்.
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் LPG சிலிண்டர்களிலிருந்து குழாய் வழி இயற்கை எரிவாயுவிற்கு (PNG) மாறுவதை விரைவுபடுத்த நிறுவனங்களை ஊக்குவிப்பதே இம்முயற்சியின் நோக்கமாகும்.
செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் இச்சலுகை, ஒவ்வொரு புவியியல் பகுதிக்கும் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் கூடுதலாக வழங்கப்படும் புதிய வீட்டு உபயோக PNG இணைப்புகளுக்குப் பொருந்தும்.
பெட்ரோலிய அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பயன்பாட்டில் இல்லாத அல்லது கட்டணம் வசூலிக்கப்படாத இணைப்புகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கும், தற்போது PNG வசதி இல்லாத பகுதிகளுக்கு இக்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், எரிவாயு நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில் உள்நாட்டு எரிவாயு ஒதுக்கீடு செய்யப்பட்டு, இணைப்புக்கான கால அவகாசம் 10 ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாகக் குறைக்கப்படுகின்றது. இப்புதிய ஊக்கத்தொகை திட்டம் ஆறு மாத காலத்திற்கு இரண்டு தவணைகளாக அமல்படுத்தப்படுகிறது.
மார்ச் மாதம் முதல் 5 லட்சத்திற்கும் அதிகமான பிஎன்ஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 5.7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய இணைப்புகளுக்காகப் பதிவு செய்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் பிஎன்ஜி பயன்பாட்டை விரைவுபடுத்த இயற்கை எரிவாயு மீதான வாட் வரியை 5 சதவீமாகக் குறைக்க மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்காக National PNG Drive 2.0 இயக்கமும், புதிய இணைப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் கண்காணிக்கவும் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் போர்ட்டலும் உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முயற்சியால் இனிவரும் காலங்களில் இந்தியாவில் பிஎன்ஜி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.