

மத்திய அரசு இயற்கை எரிவாயு (PNG) பயன்பாட்டை தீவிரமாக ஊக்குவிக்கும் விதமாக பல அதிரடி விதிகளை அமல்படுத்த தயாராகி வருகிறது. தேசிய பிஎன்ஜி இயக்கம் 2.0 (National PNG Drive 2.0) ஜூன் 30-ம்தேதியுடன் முடிவடையும் நிலையில், சிலிண்டர் பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் சர்வதேச கச்சா எண்ணெய் சப்ளை பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இந்த போர் பதற்றம் காரணமாக ஏற்பட்ட சர்வதேச விநியோகச் சங்கிலி பாதிப்பால் இந்தியாவில் சமையல் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு உருவானது.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கப்பல்கள் போக்குவரத்து தடைபட்டன. இதன் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்ற சிக்கல்கள் எழுந்தன. மேலும் சிலிண்டர் முன்பதிவு செய்யும் விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், இன்று முதல் (ஜூன் 1-ந்தேதி) சிலிண்டர் முன்பதிவு செய்வதில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்தியன், பாரத், ஹெச்பி கேஸ் இணைப்புகளை திரும்ப ஒப்படைத்தல் உள்ளிட்டவைகளில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது.
அரசின் திரவ பெட்ரோலிய எரிவாயு திருத்தம் கடந்த 25ந்தேதி திருத்தப்பட்டது. இந்தத் திருத்தத்தின் நோக்கம், குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகளைப் பெறும் வீட்டு உபயோக LPG சிலிண்டர் நுகர்வோருக்குக் கூடுதல் வசதிகளை வழங்குவதாகும்.
மாற்றங்கள்:
உங்கள் பகுதியில் PNG கேஸ் வசதி இருந்தால் LPGயை கைவிட்டு அந்த வசதிக்கு மாற வேண்டும் என கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஜூன் மாதத்துடன் அதற்கான 3 மாத காலக்கெடு முடிவடையும் நிலையில், உங்கள் பகுதியில் PNG வசதி இருந்தும் இன்னும் நீங்கள் மாறவில்லை என்றால் உங்கள் LPG சிலிண்டர் இணைப்பு தானாகவே துண்டிக்கப்படும். அதேபோல் ஒரே முகவரியில் இரு வகையான கேஸ் கனெக்ஷன்களை வைத்திருப்பது இனி சட்டப்படி அனுமதிக்கப்படாது.
இன்று முதல் (ஜூன் 1ம் தேதி), PNG இணைப்புகளைப் பெறும் நுகர்வோருக்குக் கூடுதல் வசதிகள் வழங்கப்படும்.
30 நாட்கள் கெடு:
புதிய PNG இணைப்பு பெற்ற 30 நாட்களுக்குள், பழைய எல்பிஜி சிலிண்டர் இணைப்பை ரத்து செய்ய வேண்டும். தேவைப்பட்டால் LPG இணைப்புக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் வசதியும் உண்டு.
எனவே நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் இப்போதே தங்கள் பகுதியில் PNG வசதி உள்ளதா என சரிபார்த்து, தேவையான நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.
ஒரு வீடு ஒரு கேஸ் இணைப்பு:
PNG பயன்படுத்துபவர்கள் புதிய மீண்டும் LPG சிலிண்டருக்கு விண்ணப்பிக்கவோ, ரீபில் செய்யவோ முடியாது. கள்ள சந்தையில் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதையும், தவறான பயன்பாட்டையும் தடுப்பதே இதன் நோக்கம்.
சிலிண்டர் முன்பதிவு விதிமுறைகள்:
நெருக்கடி காரணமாக ஒரு சிலிண்டர் புக் செய்த பிறகு அடுத்த சிலிண்டர் புக் செய்வதற்கான கால இடைவெளி (Lock-in Period)நகரப் பகுதிகளில் 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 12 மானிய விலை சிலிண்டர்கள் என்ற உரிமை தொடரும். அதற்கு மேல் தேவைப்பட்டால் முழு சந்தை விலையில் வாங்க வேண்டும். புதிய எல்பிஜி கனெக்ஷன் எடுப்பவர்களுக்கு டெபாசிட் மற்றும் இன்ஸ்டலேஷன் கட்டணம் சற்று உயர்த்தப்பட்டுள்ளது.
தற்பொழுது 99% சிலிண்டர் பதிவுகள் ஆன்லைன் மூலமாகவே டிஜிட்டல் முறையில் நடைபெறுகின்றன என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
எனவே முறைகேடுகளை தவிர்க்க சிலிண்டர் டெலிவரியின் போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-யைக் கூறினால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும்.
KYC சரிபார்ப்பு:
கள்ளச் சந்தையில் சிலிண்டர் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க KYC விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் உஜ்வாலா யோஜனா பயனாளிகள் மற்றும் இதுவரை சரிபார்ப்பு செய்யாத நுகர்வோர், தங்களின் பயோமெட்ரிக் ஆதார் மூலம் KYC-யை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.