ராஜ் பவனில் அரசியல் செய்துகொண்டு இருக்கிறார் ஆளுநர் -தங்கம் தென்னரசு விமர்சனம்!

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர், ராஜ் பவனில் உட்கார்ந்து அரசியல் செய்துகொண்டு இருக்கிறார் என்பதைத்தான் அவரது கருத்துகள் காட்டுகின்றன. மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் உள்ளதை மறந்துவிட்டு பேசுகிறார்.” என்று தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், “ஆளுநர் பணியைத் தவிர அனைத்துப் பணிகளையும் ஆளுநர் ரவி செய்கிறார். சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார்.

திராவிடத்துக்குத் தவறான பொருள் சொல்கிறார். திருக்குறளைத் திரிக்கிறார். சிவாஜி ஏன் படையெடுத்து வந்தார் என்ற வரலாற்றை மறைக்கிறார். தனக்குத் தோன்றும் புதிய காரணங்களைக் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு சட்டத்துக்குப் புறம்பான விளக்கங்கள் சொல்கிறார். அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதையே பேசுகிறார்.

“ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துகளில் இருந்து, ‘ஆளுநர் பதவி’க்காக அவர் தமிழகத்துக்கு வரவில்லை, பாஜக தலைவர் பதவிக்காக வந்தவர் என்பதை உணர முடிகிறது.

தான் மேற்கொண்ட பதவிப் பிரமாணத்தை மீறி பொதுவெளியில் நிர்வாக விவரங்களைச் சொல்லி வருகிறார். இப்படி ஆளுநர் பதவிக்கு அழகில்லாத, அடிப்படையில்லாத செயல்களை மட்டுமே செய்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தனிப்பட்ட இரவியாக இருந்தால் அதனை மதிக்கத் தேவையில்லை. ஆனால் ஒரு மாநிலத்தின் ஆளுநராக, அதுவும் தமிழகத்தின் ஆளுநராக இருப்பதால் பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது.

இங்கு வந்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டது முதல், அவர் சொல்லி வரும் அபத்தமான கருத்துகளுக்கும் தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகிறது தி.மு.க. காரணம், அந்த அடிப்படையற்ற கருத்துகள் மறுக்கப்படாவிட்டால் அவை சரியானதோ என சிலரேனும் தவறாக நினைத்துவிடக் கூடும். தமிழகத்தின் ஜனநாயகச் சக்திகளின் கடுமையான கண்டனத்துக்குரியவராக அவர் இருந்து வருவதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com