

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இரண்டு நர்சுகள் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நிபா வைரஸ் என்பது விலங்குகள் வாயிலாக பரவும் நோய்த்தொற்று. குறிப்பாக பழ வகை வௌவால்கள், பன்றிகள், நாய்கள், குதிரைகள் போன்ற விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. தற்போது வரை தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லையென்றாலும், மக்கள் பதற்றமின்றி விழிப்புடன் இருக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
வவ்வால்கள் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை சாப்பிடுவதன் மூலமோ, பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலமோ இந்நோய் மற்றவர்களுக்கு பரவும். எனவே பதநீர், கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். தூர்வாரப்படாத கிணறுகளின் அருகில் செல்லாமல் இருப்பது அவசியம். பழங்களைக் கழுவாமல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
காய்ச்சல், தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, மூச்சுத்திணறல், வலிப்பு போன்ற அறிகுறிகள் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட 6 முதல் 21 நாட்களுக்குள் தென்படும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 40 முதல் 75% உயிர்ப்பிழைப்பதற்கான சாத்திய கூறுகள் மிகவும் குறைவு என கூறப்படுகிறது. இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
அத்துடன் எல்லை மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான நோய் தொற்றுகளை முன்கூட்டியே கண்டறிந்து செயல்பட மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் கூறப்படுகிறது.