Aadhar mandatory for Reservation Ticket
train ticket

IRCTC | இனி ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இது அவசியம்..!

Published on

ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரயில்வே நிர்வாகம்.

உலகிலேயே அதிக ரயில்களை இயக்கும் நாடு எந்த பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அதைத் தவிர, உலகின் அதிக மக்கள் ரயில் வசதியை பயன்படுத்துவதும் இந்தியாவில்தான். அதுவும் குறிப்பாக பல எளிய மக்கள் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுப்பார்கள். எந்த ஒரு பிரச்னையின்றி சௌகர்யமாக குழந்தையை வைத்து செல்வதற்கு ரயிலே சிறந்த தேர்வாக இருக்கிறது.

ரயிலில் செல்வதற்கு பலரும் ஐஆர்சிடிசி IRCTC இணையதளத்தில் தான் முன்பதிவு செய்வார்கள். பொதுவாக விரைவு ரயில்களுக்கான முன்பதிவு, ரயில் புறப்படும் நாளில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கி விடும். இடைத்தரகர்கள் பலரும் ரயில் டிக்கெட்டுகளை அதிகளவில் முன்பதிவு செய்து, அதனை பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் சார்பில் அதிக அளவில் புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என ரயில்வே துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தது. இந்த நிலையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவில் நடக்கும் மோசடிகளை தடுக்கும் நோக்கில், பயணிகள் தங்கள் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது.

மேலும், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதன் நீட்சியாக, கடந்த 29 ஆம் தேதி முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த நேரம் தற்போது 4 மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

வரும் 12 ஆம் தேதிக்கு பிறகு, ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைத்திருந்தால் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com