சட்டமன்ற தேர்தல் காரணமாக சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைக்கக் கோரி வழக்கு. இவ் வழக்கை அவசரமாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளர் ஒருவர் இந்த வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதாவது தேர்தல் பிரச்சாரங்கள் உச்சத்தை எட்டியிருக்கும் ஏப்ரல் 4 மற்றும் 11ஆம் தேதிகளில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. ஐபிஎல் போட்டிகளில் அரசியல் கட்சிகள் தங்களுடைய பிரச்சாரத்தை செய்ய ஆதரவாளர்களை மைதானத்தில் களம் இறக்க வாய்ப்பு உள்ளது. மைதானத்திற்குள் மோதல்களுக்கும் வழி வகுக்கும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். எனவே இந்த தேதிகளில் சென்னையில் போட்டி நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுள்ளார். அந்த மனு இதுவரை விசாரணைக்கு வரவில்லை.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என இன்று காலை தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. ஆனால், இந்த முறையீட்டை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மனு முறையாக எண்ணிடப்பட்டால் வழக்கமான நடைமுறைப்படி விசாரணைக்கு வரும் என்று தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது. அத்துடன் சட்டத்தில் எந்த தடையும் இல்லாத நிலையில் கிரிக்கெட் போட்டிகளை எப்படி நிறுத்த முடியும் என்ற கேள்வியும் எழுப்பி உள்ளது. ஐபிஎல் போட்டிகளை நடத்துவதால் மனுதாரருக்கு என்ன பிரச்சனை எனவும் தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.