

இந்தியாவின் தொழில் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
2024-25 நிதியாண்டிற்கான ரிசர்வ் வங்கி அளித்த புள்ளி விபரங்களின் படி 16% பொருளாதார வளர்ச்சியுடன் தொழில் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் சென்னை , கோவை ,தூத்துக்குடி, மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழில் முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தியதன் மூலம் தற்போதைய அரசு ரூபாய் 160.53 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில் உற்பத்தி 82.6 சதவீதம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தொழிற்சாலைகளில் ரூபாய் 9.65 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்கள் உற்பத்தி செய்து இந்திய அளவில் தமிழ்நாடு தொழில்துறை உற்பத்தியில் இந்திய அளவில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்த தொழிற்சாலைகளில் 15.43% தமிழ்நாட்டில் உள்ளதாகவும் , சுமார் 16% வளர்ச்சியுடன், இந்தியாவின் மிக வேகமாக வளரும் பெரிய மாநிலமாக தமிழ்நாடு உருவாகியுள்ளதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.
உறுதியான தொழில்துறை பணியாளர்களைக் கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது என்றும் இந்தச் சாதனை, மாநிலத்தின் கொள்கை முடிவுகள், தொழில்துறை வளர்ச்சி மற்றும் உற்பத்தி மேன்மைக்கு சான்றாக அமைந்துள்ளதாகவும் கருதப்படுகிறது.
தொழில் வளர்ச்சியில் வலுவான மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாடு இச்சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.