

தமிழ்நாட்டில் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது சட்டமன்ற தேர்தல் காரணமாக கடந்த மூன்று மாதத்திற்குமான தொகையை தமிழக அரசு ஏற்கனவே விடுவித்து விட்டது. தேர்தலுக்குப் பிறகு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2,000 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் குறைந்தபட்சம் ரூ.2,000 கிடைப்பது உறுதி ஆகியுள்ளது. இந்நிலையில் மாதந்தோறும் கிடைக்கும் இந்த உதவித்தொகையை பெண்கள் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
மகளிர் உரிமைத் தொகையில் கிடைக்கும் உதவித்தொகையை பெரும்பாலான பெண்கள் வீட்டு செலவுகளுக்காகவே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்தத் தொகையை அஞ்சல் சேமிப்பு, வங்கி சேமிப்பு, மியூச்சுவல் ஃபண்டு மற்றும் எஸ்ஐபி உள்ளிட்ட சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், வருங்காலத்தில் மிகப்பெரிய லாபத்தை ஈட்ட முடியும். இதற்கு பெண்கள் மத்தியில் தெளிவான திட்டமிடல் தேவை.
ஒருசில பெண்கள் மகளிர் உதவித்தொகையை சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினாலும், அது சரியான வழி தானா என்ற குழப்பத்தில் உள்ளனர். மேலும் சிலருக்கு உதவித்தெகையை முதலீடு செய்வது திட்ட விதிமுறைகளுக்கு எதிராக இருக்குமோ என்ற சந்தேகமும் உண்டு.
ஆனால் அரசு வழங்கும் உதவித்தொகை உங்களுக்கு கிடைத்த பிறகு, அது உங்கள் பணம். உடனே செலவு செய்யலாமா அல்லது சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாமா என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு மாதந்தோறும் ரூ.2,000 கிடைக்கும் என்பதால், பாதுகாப்பான முதலீட்டுக்கு அஞ்சல் அலுவலகத்தை நாடலாம். இந்தத் தொகையை அஞ்சல் அலுவலகத்தில் ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அஞ்சல் அலுவலக சேமிப்பு:
ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 முதலீடு செய்யும் போது, மொத்த முதலீடு ரூ.1,20,000 ஆக இருக்கும். இந்தத் தொகை ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் 7.8% வட்டியுடன் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ.1,44,000 கிடைக்கும்.
மியூச்சுவல் ஃபண்டு:
அதிக லாபம் வேண்டும் என நினைத்தால், இந்தப் பணத்தை மியூச்சுவல் ஃபண்டு, எஸ்ஐபி உள்ளிட்ட திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டங்களில் 12% முதல் 13% வரை வட்டி கிடைக்கும் என்பதால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து கிட்டத்தட்ட ரூ.2,00,000 வரை கிடைக்கும்.
மறுமுதலீடு:
5 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் மொத்த பணத்தையும் முதலீடு செய்ய விரும்பினால், பிக்ஸட் டெபாசிட் திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால், அடுத்த 10 ஆண்டுகளில் உங்கள் பணம் இரட்டிப்பாக மாறும்.
மாதந்தோறும் ரூ.2,000 தானே என்று செலவழித்து விடாதீர்கள். நீங்கள் திட்டமிட்டு முதலீடு செய்தால், இதனை பல லட்சங்களாக மாற்றி விட முடியும்.
இந்தப் பணம் வருங்காலத்தில் மிகப்பெரிய தொகையாக உங்களின் பெரிய தேவையை பூர்த்தி செய்யவும் உதவும்.
அடுத்த தேர்தல் வரும்போது மகளிர் உரிமைத் திட்டத்தில் கிடைத்த தொகை, உங்கள் கைகளில் லட்சங்களாக இருக்க முதலீட்டில் அதிக கவனம் செலுத்துங்கள்