

இந்தியாவில் பயன்படுத்தப்படும் தனிநபர் அடையாள அட்டைகளில் ஆதார் கார்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரேஷன் கார்டு முதல் வங்கிக் கணக்கு வரை, ஆதார் அட்டையை இணைத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு முதலில் உங்கள் ஆதார் எண்ணில் மொபைல் எண்ணை லிங்க் செய்ய வேண்டியது அவசியம்.
பெரும்பாலான மக்கள் ஏற்கனவே ஆதாருடன் மொபைல் என்னை லிங்க் செய்துள்ளனர். இன்னமும் நீங்கள் மொபைல் எண்ணை லிங்க் செய்யவில்லை என்றால், ரூ.75 கட்டணம் செலுத்தி ஆதாருடன் உங்கள் மொபைல் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். இதற்கு முன்பு வரை இந்தக் கட்டணம் ரூ.50 ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு ரூ.75 ஆக உயர்த்தியது மத்திய அரசு.
இந்நிலையில் ஆதாருடன் இமெயில் முகவரியை இணைக்கவும் மத்திய அரசு பொதுமக்களுக்கு சலுகையை வழங்கியுள்ளது. இதன்படி இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரையிலான 6 மாத காலத்திற்கு ஆதாருடன் இமெயில் முகவரியை கட்டணமின்றி இலவசமாக இணைத்துக் கொள்ளலாம்.
டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்க சைபர் கிரைம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஆதார் எண்ணைப் பாதுகாப்பான முறையில் கையாள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆதார் சேவைகளைப் பெறுவதற்கு மொபைல் எண் ஓடிபி அவசியம். இருப்பினும் ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைத்த அளவிற்கு, இமெயில் முகவரியை பொதுமக்கள் பலரும் இணைக்கவில்லை. ஆதார் கார்டுடன் இமெயில் முகவரியை இணைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தற்போது மத்திய அரசு பொதுமக்களுக்கு மிகப்பெரிய சலுகையை வழங்கி உள்ளது.
இதன்படி இன்று (ஜூலை 1) முதல் அடுத்த 6 மாத காலத்திற்கு ஆதாருடன் இமெயிலை இணைக்க கட்டணம் செலுத்த வேண்டாம். இதற்கு முன்பு வரை ஆதார் - இமெயில் முவரியை இணைக்க ரூ.75 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தக் கட்டணத்தை ரத்து செய்ய இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆலோசனை மேற்கொண்டது.
இந்த ஆலோசனையின் முடிவில் அடுத்த 6 மாதத்திற்கு ஆதாருடன் இமெயில் முகவரியை பொதுமக்கள் இலவசமாக இணைத்துக் கொள்ளலாம் என்ற சலுகையை வழங்க முடிவு செய்யப்பட்டது. இன்று முதல் இந்த சலுகை அமலுக்கு வர இருப்பதால், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதாரில் இமெயில் முகவரியை இணைப்பது எப்படி?
* ஆதார் சேவை மையத்திற்கு சென்று, ‘Aadhaar Enrolment / Update Form' என்ற படிவத்தை நிரப்ப வேண்டும்.
* அதில் உங்கள் ஆதார் எண், மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரி உள்ளிட்ட தகவல்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
* விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, ரசீது ஒன்று வழங்கப்படும். அதில் உள்ள URN (Update Request Number) எண்ணைக் கொண்டு, உங்கள் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஆதார் செயலி வழியாகவும், இமெயில் முகவரியை இணைக்கும் வசதி தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் மத்திய அரசின் இந்த சலுகையை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2026 டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு பழையபடி கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.