

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் லஞ்சம் குறித்து பொதுமக்கள் நேரடியாகத் தனக்கே புகாரளிக்கும் வகையில் அமைச்சர் ரமேஷ் தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் ஆன்மிகத் தலங்களில் தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில் அதிரடியான டிஜிட்டல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அதாவது, தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் ஊழல்களைத் தடுக்கும் நோக்கில், அமைச்சர் எஸ்.ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அவரது அறிவிப்பில், ‘திருக்கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாகப் பணம் வசூலித்தல், கோவில் திருப்பணிகளில் முறைகேடு மற்றும் கோவில் வேலைவாய்ப்புகளுக்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தால், பொதுமக்கள் தகுந்த ஆதாரங்கள் மற்றும் விளக்கங்களுடன் தனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு (minister_hrce@tn.gov.in) புகார்களை அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது எவ்வித தாமதமும் இன்றி, தானும், தன்னுடைய அமைச்சக அலுவலகமும் நேரடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்யும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். ஆன்மிகத் தலங்களில் தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய அமைச்சர் ரமேஷ் எடுத்துள்ள இந்த அதிரடி டிஜிட்டல் ஆக்ஷன் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது’. குறிப்பாக ஆன்மிக பக்தர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, அமைச்சர் ரமேஷ் களத்திலும் தனது அதிரடி ஆக்ஷனை நிரூபித்துள்ளார். அண்மையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் ரமேஷ், சாதாரண பக்தரைப் போல முகக்கவசம் அணிந்து சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சிறப்பு தரிசனத்திற்காக அவரிடமே ஊழியர்கள் லஞ்சம் பெற்றதை கையும் களவுமாகப் பிடித்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர் மற்றும் பணியாளர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திராவிட கட்சிகளை ஓரம்கட்டி 108 இடங்களை கைப்பற்றி தவெக தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றது முதல், மாநிலத்தில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில் முக்கிய அதிரடி மாற்றங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
அரசு ஒப்பந்தங்களில் ஊழலைத் தவிர்க்கும் நோக்கில், டெண்டர்கள் அனைத்தும் வெளிப்படையான போட்டி ஏல முறைக்கு மாற்றப்பட்டதன் மூலம் அரசு நிதி பெருமளவில் சேமிக்கப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பதைத் தடுக்க, ஆதாரம் (ஆடியோ/வீடியோ) அளிக்கும் குடிமக்களுக்கு ரூ.1,00,000 பரிசுத் தொகையும், கட்டணமில்லா உதவி எண்ணும் (1800-425-1555) அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஜூன் 23 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில், ‘மக்களின் பணத்தைத் தொடமாட்டேன்; ஊழல் செய்த எவரையும் மன்னிக்க மாட்டேன்’ என்று அவர் உறுதியளித்தார்.
அந்த வகையில் ஆன்மிகக் கடலில் தூய்மையைக் கொண்டுவர டிஜிட்டல் தளத்திலும், களத்திலும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் எடுத்து வரும் இத்தகைய தீவிரமான நடவடிக்கைகள், கோவில் நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனப் பக்தர்கள் பெரிதும் நம்புகின்றனர்.