

தமிழ்நாட்டில் கடந்த மே 10-ம் தேதி முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவி ஏற்றது. ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை மாதமாகும் நிலையில், இப்போது வரை நிதித் துறை மற்றும் மின்சார துறையில் வெள்ளை அறிக்கைகளை அமைச்சர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதுதவிர விரைவில் வேளாண் துறைக்கும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேவைப்பட்டால் பத்திரப்பதிவுத் துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜூன் 25-ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் சுங்குவார்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் திடீர் ஆய்வை மேற்கொண்டார். அப்போது, பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் யாரும் கூடுதல் கட்டணத்தை யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்று அமைச்சர் உறுதியாக தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது வெள்ளை அறிக்கை வெளியாகவும் வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் மீதும் ரூ.1 லட்சத்திற்கும் மேல் கடன் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். அதேபோல் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் மின்சார துறைக்கு ரூ.2 லட்சம் கோடிக்கும் மேலாக கடன் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பத்திரப்பதிவுத் துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டால், அது தமிழ்நாட்டில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறுகையில், “முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் சர்வர் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இந்நிலையில் முகூர்த்த நாட்களில் பத்திரப் பதிவின் போது சர்வர் கௌளாறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் சந்தை மதிப்புக்கும், வழிகாட்டி மதிப்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை சரிசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுத் துறையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் பத்திரப்பதிவு துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பத்திரப்பதிவுத் துறையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்படி பத்திரப்பதிவு செயல்முறையை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை இறங்கியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட வகையான சொத்து ஆவணங்களுக்கு எங்கிருந்து வேண்டாமானாலும் பதிவு செய்யும் வசதியை கட்டாயமாக்க உள்ளது. ஒரு சில வாரங்களில் செயல்பாட்டுக்கு வரவுள்ள இந்த டிஜிட்டல் ஆவணப்பதிவு முறையின் மூலம், இனி பொது மக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாது.
எங்கிருந்தாலும் 24 மணி நேரமும் இணையதளத்தின் வழியாக இணையவழியிலேயே தங்களது ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.