இட்லிக்கு ஜே!

உலக இட்லி தினம் – மார்ச் 30
இட்லிக்கு ஜே!
Updated on

ன்று என்ன காலை உணவு எனும் கேள்விக்கு பெரும்பாலான தமிழர்களின் பதில் வழக்கம்போல மல்லிப்பூ இட்லியும் சாம்பார் சட்னிதான் என்பதாகத் தான் இருக்கும். உளுந்தும் அரிசியும் வெந்தயமும் சேர்த்து அரைக்கப்பட்டு உப்பு சேர்த்து  குறைந்தது எட்டு மணி நேரம் கழித்து அதற்கென இருக்கும் இட்லிப் பாத்திரத்தில் அந்த மாவை நன்கு கரைத்து இட்லிகளாக ஊற்றி சிறிது நேரம் கழித்து வெந்ததும் எடுத்தால் கிடைக்கும் மென்மையான தும்பைப்பூ போன்ற இட்லி. ஆவியில் வேகவைக்கப்படும் இட்லிகள் நம் ஆரோக்கியம் காக்கும் முதன்மை உணவாக உள்ளது. சரி இன்று எதற்கு இட்லி புராணம் என்று கேட்கறீர்களா? பின்ன உலக இட்லி தினமான இன்று . இந்தப் பெருமைகளை சொல்லாமல் இருக்க முடியுமா?

   இட்லி இந்தியாவில் தோன்றிய உணவாக நாம் நினைத்துக்கொண்டு உள்ளோம் . இல்லை இட்லியின் பூர்வீகம் இந்தோனேசியாதான். ஆனால் அங்கிருந்து இங்கு வந்த இட்லியை தென்னிந்தியாவில் மிகவும் விரும்பி அதை நம் உணவாக மாற்றிக்கொண்டோம். புரதம் நார்ச்சத்து கார்போஹைட்ரேட் என அனைத்தும் ஒருங்கிணைந்த உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததாக உலக மக்கள் அனைவராலும் விரும்பப்படும் உணவாக உள்ளதால் உலக சுகாதார அமைப்பு அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவுகளில் இட்லியையும் சேர்த்துள்ளது.

      ஆண்டுதோறும் மார்ச் 30 ம்தேதி  உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. இப்படி இட்லிக்கு உலகளவில்  மதிப்பைத் தந்தவர் நம் தமிழர் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.

கோவையைச் சேர்ந்த இனியவன் என்பவர் இட்லி செய்வதில் அதீத விருப்பம் கொண்டு அதில் கின்னஸ் சாதனை செய்தவர் .124 கிலோ மாவில் இட்லி செய்து கின்னஸ் வரலாற்றில் இடம் பிடித்த இவர் சுமார் 2000 வகையான இட்லி வகைகளை உருவாக்கிய பெருமை உடையவர். இவரால் இட்லி மீதுகவனம் ஈர்க்கப்பட்டு  தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர் சங்கத்தினர் மற்றும் பல தரப்பினரும்  இட்லி தினம்  கொண்டாடும் திட்டத்தை முன்மொழிந்தனர். இதன் விளைவாக மார்ச் 30ஆம் தேதி உலக முக்கிய தினமாக அறிவிக்கப்பட்டது அதன்படி இன்று உலக இட்லி தினம் சமூகவலைத்தளம் முதல் எங்கும் இட்லிப் பிரியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

   நம் பாட்டி தாத்தா காலத்தில் பண்டிகை போன்ற நாட்களில் மட்டும் கிடைத்த இட்லி இன்று அன்றாடம் நம் பசியைப் போக்கும் உணவில் முதலிடம் பிடித்துள்ளது . மலிவான விலையில் தொட்டுக் கொள்ள பலவித சுவைகளில் சட்னி, சாம்பார் என நம்மை மகிழ்விக்கும் இட்லிக்கு ஜே.

கையேந்தி பவனின் மூலம் விற்பனை செய்யப்படும் இட்லிகள் பலரின் வாழ்வாதாரம் காக்கும் அற்புத உணவாகிறது என்பதும் உண்மை. 

    நம் குழந்தைகளுக்கு பீசா, பர்கர் என ஆரோக்கியமற்ற துரித உணவுகளைத் தந்து அவர்களின் ஆரோக்கி யத்தைக் குலைக்காமல் இட்லியை உண்ணும்படி பழக்கி விட்டால் என்றும் உடல் நலனுடன் வாழலாம்.

logo
Kalki Online
kalkionline.com