
நம்மில் பலருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கும். கிராமங்களில் பெரும்பாலும் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தான் அதிகம். ஆனால் சென்னை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தான் அதிகம். இன்றைய பொருளாதார உலகில் சொந்த வீடு கனவை நிறைவேற்ற வங்கிகள் கடன் கொடுத்து உதவுகின்றன. வீட்டுக் கடன் என்பது நீண்ட கால கடன் என்பதால், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வங்கிகள் உடனே கடன் கொடுக்கும்.
இருப்பினும் வீட்டுக் கடனைச் பொறுத்தவரை எந்த வகையான கடனை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேலைக்குச் செல்லும் நபர்கள் பெரும்பாலும் தனிநபரின் பெயரிலியே வீட்டுக் கடனை வாங்குகின்றனர். இதனால் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் அதிக பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். ஆனால் கூட்டு வீட்டுக் கடன் வசதியைப் பயன்படுத்தினால் பொருளாதார நெருக்கடி குறைவதோடு, கூடுதல் பலனும் கிடைக்கும். வங்கிகளும் தற்போது கூட்டு வீட்டுக் கடன் குறித்த விழிப்புணர்வுகளை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன.
கூட்டு வீட்டுக் கடனில் இருவர் பெயர் மீது கூட்டாக கடன் வழங்கப்படும். இந்தக் கடனைப் பெற இருவரும் வேலைக்குச் செல்பவராக இருத்தல் வேண்டும். ஒரு வீட்டில் கணவன் மற்றும் மனைவி இருவருமே வேலைக்குச் செல்பவர்கள் என்றால், இருவரது சம்பளமும் கணக்கிடப்பட்டு வீடு வாங்குவதற்கான தொகையில் 80% பணத்தை கடன் தொகையாக வங்கிகள் வழங்கும். ஒருவேளை மனைவி இல்லத்தரசியாக இருந்தால், வேலைக்குச் செல்லும் பெற்றோரின் பெயரை கூட்டு வீட்டுக் கடனில் சேர்த்துக் கொள்ளலாம்.
கூட்டு வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு, யாரை கடனில் சேர்த்துக் கொள்ளப் போகிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. கூட்டு வீட்டுக் கடனிற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்பதால், விண்ணப்பித்த சில நாட்களிலேயே கடன் கிடைத்து விடும் என்பது இதன் சிறப்பம்சமாகும். அதோடு இதில் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், EMI தொகை இரண்டாக பிரிக்கப்படுவது தான். EMI தொகையை இருவரும் சேர்ந்து கட்டுவதால், தனிப்பட்ட நிதி நெருக்கடியைத் தவிர்க்க முடியும்.
வீடானது கடன் பெறும் இருவரின் பெயரிலும் இருந்தால், வரி விலக்கு உள்ளிட்ட சில சலுகைகளும் கிடைக்கும். கூட்டு வீட்டுக் கடனை சரியாக திருப்பிச் செலுத்துவதன் மூலம் இருவருக்குமே சிபில் ஸ்கோர் உயரும்.
வீடு கட்டுவதற்கோ அல்லது வாங்குவதற்கோ கடன் தான் வாங்க வேண்டும் என முடிவெடுத்து விட்டால், முதலில் எந்த வங்கியில் குறைந்த வட்டி வசூலிக்கப்படுகிறது என்பதை ஆராயுங்கள். அதோடு கடன் தொகை எவ்வளவு கிடைக்கும், சலுகைகள் என்னென்ன மற்றும் கூடுதல் கட்டணங்கள் உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொண்ட பின் கடன் பெற விண்ணப்பிப்பது நல்லது.
ரெப்போ வட்டி விகத்தைப் பொறுத்து வீட்டுக் கடன் வட்டி நிர்ணயிக்கப்படுவதால், தற்போதைய சூழலில் வீட்டுக் கடன் எடுக்க நினைப்பவர்கள், உடனே எடுத்து விடுவது நல்லது. ஏனெனில் தற்போது ரெப்போ விகிதம் 5.5% என்ற அளவில் உள்ளதால், வட்டி குறைவாகவே இருக்கும்.