Children using Mobile phone
Children using Mobile phone

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சோஷியல் மீடியா பயன்படுத்தத் தடை!

Published on

இனி 16 வயதுக்குட்பட்டவர்கள் சோஷியல் மீடியா பயன்படுத்தக் கூடாது என்ற சட்டத்தை அமல்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியா .

இப்போதெல்லாம், குழந்தைகள் பேச ஆரம்பிக்கிறார்களோ இல்லையோ, ஆனால் போனை மட்டுமே உடனே கையில் எடுத்துவிடுகிறார்கள். அவர்களுக்கான அக்கௌன்ட் இருக்கோ இல்லையோ சோஷியல் மீடியாவிலேயே முழுவதும் இருக்கிறார்கள். பல மணி நேரம் குழந்தைகள் சோஷியல் மீடியாவில் இருப்பதால், பல விளைவுகளை அவர்கள் சந்திக்கின்றனர்.

இதனால் சில மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவின் சிட்னியில், அதிக நேரம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தினால் அது குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே மன ரீதியான மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், மனச்சோர்வு மற்றும் பதற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்றும் சில ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. மேலும் உளவியல் ரீதியான பாதிப்புகளையும் கூட ஏற்படுத்தலாம் என எச்சரிக்கப்பட்டது. இதுக்கூட பரவாயில்லை, சிறு வயதில் அதிகம் போன் பயன்படுத்துவதால், தாங்கள் யார், என்ன ஆக ஆசை என்பது போன்ற கேள்விகளுக்கு கூட அவர்களால், பதில் சொல்ல முடியவில்லை. இதனால், Identity development-ல் கூட சிக்கல் ஏற்படுகிறது.

11 வயது முதல் 15 வயது வரை மூளை மிகவும் உணர்திறன் மிக்கதாக இருக்கும். அந்த சமயங்களில் சில விஷயங்களை கற்றுக்கொள்ளவில்லை என்றால், வாழ்க்கை முழுவதும் கஷ்டமாகிவிடும். அதுவும் சுயக்கட்டுப்பாடை கற்றுக்கொள்ள 20 வயது வரைக்கூட ஆகிவிடும்.

இதனால் சிட்னியில் 14 வயதுக்குட்பட்டவர்கள் சோஷியல் மீடியா பயன்படுத்தக் கூடாது என்ற விதி அமலுக்கு வந்தது. ஆனால், இதனை 16 ஆக உயர்த்த வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து தற்போது ஆஸ்திரேலியா முழுவதும் 16 வயதிற்குட்பட்டவர்கள் சோஷியல் மீடியா பயன்படுத்த கூடாது என்ற விதி அமலுக்கு வந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
மோசமடையும் காற்றின் தரம்… வடமாநிலங்களில் விஷக்காற்று அபாயம்!
Children using Mobile phone

இதுகுறித்து தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பேசுகையில், “சமூக ஊடகங்களை சிறுவா்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து  அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்கப்படும். ஆனால், இந்த கட்டமைப்பிற்கும் சமூக ஊடகப் பயன்பாட்டாளா்கள் அனைவரின் தனிப்பட்ட தகவல்களையும் சேகரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது.” என்று கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி பேசுகையில், “சிறுவர்களின் நலனுக்காக  16 வயதுக்குட்பட்டவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை உலகிலேயே முதல்முறையாக இயற்றியுள்ளோம்.” என்று பேசினார்.

logo
Kalki Online
kalkionline.com