
சுதந்திர தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு இந்த வாரம் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறையால் மக்கள் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.சுற்றுலா என்றாலே நம் நினைவிற்கு வரும் முதல் இடம் ஊட்டி. அதுவும் அந்த ஊட்டி ரயில் பயணம் என்றால் யாருக்கு தான் புடிக்காது. தென்னிந்தியாவில் உள்ள ஒரே மலை இரயில், நீலகிரி மலை இரயில் தான்.அடர்ந்த காடுகள்,மலைகள், ஆங்காங்கே நீர் வீழ்ச்சிகள் என இனிமையான பயணத்தை இந்த இரயில் பயணிகளுக்கு தரும். இதனால் தான் இந்த மலை இரயில் உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளை கவர்ந்திழுத்து வருகிறது.
இந்நிலையில் சுதந்திர தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விடுமுறைக்கு ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் மகிழ வசதியாக வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குன்னூர் முதல் ஊட்டி வரையில் 15, 16 மற்றும் 17-ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.ஐந்து பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ள இந்த சிறப்பு மலை ரயிலில், மொத்தம் உள்ள 210 இருக்கைகளில் 80 இருக்கைகள் முதல் வகுப்பும், 130 இருக்கைகள் இரண்டாம் வகுப்பில் இருக்கும். குன்னூரில் இருந்து காலை 8.20 புறப்படும் ரயில், 9.40 மணிக்கு ஊட்டி வந்தடையும். மாலை 4.45 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படும் ரயில், மாலை 5.55 மணிக்கு மீண்டும் குன்னூர் சென்றடையும்.
இதேபோல், ஊட்டி முதல் கேத்தி வரையிலான சிறப்பு ரயில் 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் ஊட்டி ரயில் நிலையத்தில் இருந்து 3 முறை கேத்திக்கு இயக்கப்படவுள்ளது. காலை 9.45, 11.30 மற்றும் மதியம் 3 ஆகிய நேரங்களில் கேத்திக்கு இயக்கப்படவுள்ளது.” என்று அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.