

கட்டாய உழைப்பு அல்லது கொத்தடிமை (Forced labour) மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் வகையில், இந்தியா தனது வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை மாற்றியமைத்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) வரையறையின்படி, எந்தவொரு நபரிடமும் மிரட்டி, கட்டாயப்படுத்தி அல்லது விருப்பமின்றி பெறப்படும் உழைப்பு இதில் அடங்கும்.
வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை (Foreign Trade Policy) 2023-ல் மேற்கொள்ளப்பட்ட 'பிரிவு 2.20B' திருத்தத்தின்படி, கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கிறது. இந்த மாற்றம், விரிவான விசாரணைக்குப் பிறகு குறிப்பிட்ட தயாரிப்புகளை அடையாளம் கண்டு அவற்றின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
இந்த வரையறையின்படி, ஒரு நபரின் விருப்பமான சம்மதம் இல்லாமலும், தண்டனைக்கான அச்சுறுத்தலின் கீழும் அவரிடமிருந்து பெறப்படும் பணி அல்லது சேவை 'கட்டாய உழைப்பு' எனக் கருதப்படுகிறது.
'செயல்முறை கையேடு 2023'-இல் (Handbook of Procedures, 2023) குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, கட்டாய உழைப்பைப் பயன்படுத்திப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதை மதிப்பிடுவதற்கான விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு DGFT-க்கு (வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகம்) வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) இந்தச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தும். இவ்வாராய்ச்சியின் முடிவில் குறிப்பிட்ட பொருட்கள் கட்டாய உழைப்பால் தயாரிக்கப்பட்டவை என உறுதியானால், மத்திய அரசு அவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கும்.
இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திருத்தம், கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்கிறது.
இந்தத் திருத்தமானது இந்தியாவின் வர்த்தகக் கொள்கையை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுடன் ஒருங்கிணைக்கிறது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ILO) வரையறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் கட்டாய உழைப்பு ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் வகையில் இந்தியா தனது வர்த்தகக் கட்டமைப்பை வலுப்படுத்துகிறது.
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சரின் ஒப்புதலுடன், 'வெளிநாட்டு வர்த்தக (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1992'-இன் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு இதழில் (Gazette) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரும்.
இது மிகவும் முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது, குறிப்பாக அமெரிக்கா துவங்கியுள்ள புதிய விசாரணைக்கு பின்பு, கொள்கை அளவில் இத்தகைய மாற்றம் வந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க அரசு Forced Labor முறையில் தயாரிக்கும் பொருட்களின் இறக்குமதி செய்வதை தடுக்கும் கொள்கைகளை இந்தியா, சீனா முதலான நாடுகள் முறையாக அமல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தது, இதில் இந்தியா மட்டுமில்லாமல், பிரிட்டன், சீனா, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து, வங்கதேசம், இலங்கை, வியட்நாம் என உலகளவில் சுமார் 60 நாடுகள் இதில் இருந்தது.
அத்துடன், கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதைத் தடுக்கப் போதுமான நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தால், இதுகுறித்து தனிப்பட்ட முறையில் விசாரணை செய்து, இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 12.5% வரி விதிக்கப்படும் என்று கடந்த ஜூன் 3-ம்தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் கனடா, ஈக்வேடார், ஐரோப்பிய யூனியன், இந்தோனேஷியா, மெக்சிகோ, பாகிஸ்தான் ஆகிய 6 நாடுகள் மீது 10 சதவீதம் வரி விதிக்கவும் உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது கூடுதல் சுங்கவரி (Tariff) விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்த சூழலில், புதிய வரி விதிப்பை தவிர்க்க மத்திய அரசு கட்டாய பணியமர்த்தல்(Forced Labor) மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை மொத்தமாக தடை செய்யும் வகையில் வெளிநாட்டு வர்த்தக கொள்கையை மாற்றியுள்ளது.
குறிப்பாக சர்வதேச வர்த்தகத்தில் இந்தியக் கொள்கைகளை வலுப்படுத்தவும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.