கடுமையான மனநல நெருக்கடியை எதிர்கொள்கிறது இந்தியா: ICMR

கடுமையான மனநல நெருக்கடியை எதிர்கொள்கிறது இந்தியா: ICMR

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சனையாகக் கருதப்படுவது என்ன தெரியுமா? மனநலக்கோளாறு தான். வெறுமே மனசு சரியில்லை என்று இதை ஏனோ தானோவென்று விட்டு விட முடியாது. உள்நாட்டில் கலவரங்களைத் தூண்டக்கூடிய அளவுக்கு, சின்னஞ்சிறு விஷயத்தையும் ஊதிப் பெரிதாக்கி மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி உலக நாடுகளுக்கிடையே போரைக்கூட வரவழைத்து விடக்கூடிய அளவுக்கு மனநலன் சார்ந்த கோளாறுகளுக்கு வீரியம் உண்டு என்பதற்கு ஹிட்லரின் மனநலக்கோளாறு தான் மிகப்பெரிய உதாரணம்.

தற்போது இந்தியாவில் மன நலப் பிரச்சனைகளுடன் வாழும் மக்களின் சதவிகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் ஒதுக்க வேண்டிய நிலைக்கு மக்களில் பெரும்ம்பான்மையானோர் தள்ளப்பட்டுள்ளனர். குடும்பங்களின் சுகாதாரப் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டங்களை கணக்கிட்ட இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் இன்றைய தேதிக்கு மனநலக் கோளாறுக்கு ஆளான உறுப்பினர்களைக் கொண்ட இந்தியக் குடும்பங்களில் 20 சதவிகிதத்தினர் வறுமையில் வீழ்ந்திருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது.

ஜூலை மற்றும் டிசம்பர் 2018 க்கு இடையில் நடத்தப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பில் (NSS) 1.18 லட்சம் குடும்பங்களிடையேயும் மற்றும் தனிநபர் கணக்கெடுப்பின் அடிப்படையிலான 5.76 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் மேற்கண்ட கண்டுபிடிப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஆய்வானது சோதனையின் போது மனநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்ட 6,679 நபர்களையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் முதன்முதலாக நடத்தப்பட்ட ஆய்வில், குடும்பத்தின் மொத்த சுகாதாரப் பாதுகாப்புக்கான பட்ஜெட்டில், 18.1 சதவிகிதமானது மனநலப் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

மனநலப் பிரச்சினைகளானது, 'இருமுனை மனநிலைக் கோளாறுகள் (bipolar mood disorders), மனச்சோர்வு ( depression)டிமென்ஷியா மற்றும் அறிவுசார் குறைபாடுகள் தவிர அசாதாரண எண்ணங்கள், உணர்ச்சிகள், நடத்தை மற்றும் உறவுகள்' என பல்வேறு விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், டாமன் மற்றும் டையூ (23.4 சதவீதம்), இமாச்சலப் பிரதேசம் (23.9 சதவீதம்) மற்றும் சிக்கிம் (31.9 சதவீதம்) போன்ற சிறிய பகுதிகளில் உள்ள மக்கள் மனநல கோளாறுகளுக்காக அதிகம் செலவிடுகின்றனர். பெரிய மாநிலங்களில், மகாராஷ்டிரா (21.3 சதவீதம்) மற்றும் தெலுங்கானா (22.2 சதவீதம்) முதலிடத்தில் உள்ளன. ஆய்வின்படி, அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் - 59.5 சதவீதம் - "பேரழிவு" சுகாதார செலவினங்களைக் கொண்டிருந்தன.

இந்தியா கடுமையான மனநல நெருக்கடியை எதிர்கொள்கிறது, மனச்சோர்வு, பதட்டம், இருமுனைக் கோளாறுகள் மற்றும் ஸ்கிசோஃப்ரினியா உள்ளிட்ட உடல்நலம் தொடர்பான அனைத்து கோளாறுகளிலும் ஆறில் ஒரு பங்கு நோய்கள் உள்ளன என்று ஆய்வு கூறுகிறது.

இதனால் ஒட்டுமொத்தமாக, 20.7 சதவீத குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளன. நாட்டில், சுகாதாரச் செலவுகளைக் குறைப்பதற்காக, மனநலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் நிர்வகிப்பதற்கான ஆதார நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது,” என்று கொச்சியில் உள்ள அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் துணை ஆசிரியர் டாக்டர் டென்னி ஜான் கூறினார்.

மனநோய்கள் மீதான சுகாதார செலவினங்களின் தாக்கத்தை குறைக்க நிதி இடர் பாதுகாப்பை வழங்குவதற்கான முக்கியமான தேவை இருப்பதாக ICMR ஆய்வு கூறுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com