

205 நகரங்களை உள்ளடக்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வின்படி, உலகளவில் தீவிர வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் முதல் 50 நகரங்களின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதில் உலகின் முதல் 50 நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த இரு நகரங்கள் இடம் பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆபத்து வெப்பநிலையால் மட்டுமல்லாமல், காற்றின் ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் மக்கள்தொகை போன்ற காரணிகளாலும் கணக்கிடப்படுகிறது.
அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலை மற்றும் அது தொடர்பான வெப்ப அபாயங்களால் மக்கள் எந்தெந்த நகரங்களில் அதிக ஆபத்தில் உள்ளனர் என்பதை மதிப்பிடுவதற்காக, இந்த ஆய்வு 205 உலக நகரங்களைப் பகுப்பாய்வு செய்தது.
அதிகப்படியான வெப்பநிலை பாதிப்பு, மக்கள் தொகை பாதிப்புத்தன்மை மற்றும் குறைந்த அளவிலான சமாளிக்கும் திறன் கொண்ட அதிக அபாயத்தில் உள்ள நகரங்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளன.
முதல் 50 நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள முக்கிய 14 இந்திய நகரங்கள்:
நாக்பூர் (மகாராஷ்டிரா - முதல் 10 இடங்களில் ஒன்று)
மதுரை (தமிழ்நாடு - முதல் 10 இடங்களில் ஒன்று)
அகமதாபாத் (குஜராத்)
போபால் (மத்திய பிரதேசம்)
கான்பூர் (உத்தர பிரதேசம்)
புனே (மகாராஷ்டிரா)பாட்னா (பீகார்)
ஹைதராபாத் (தெலங்கானா)
பெங்களூரு (கர்நாடகா)
கொல்கத்தா (மேற்கு வங்கம்)
ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்)
லக்னோ (உத்தர பிரதேசம்)
சென்னை (தமிழ்நாடு)
மும்பை (மகாராஷ்டிரா)
அகமதாபாத், நாக்பூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்கள் இந்த பட்டியலில் இந்திய அளவில் முன்னணியில் இருப்பதுடன், உலகளவில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய முதல் 10 நகரங்களின் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய நகரங்களில், அகமதாபாத் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது; அதைத் தொடர்ந்து மதுரை (7-வது இடம்), போபால் (15-வது இடம்) மற்றும் கான்பூர் (20-வது இடம்) ஆகியவை உள்ளன.
அதுமட்டுமின்றி முக்கிய சுற்றுலா தலமான ஜெய்ப்பூர் வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது.
ஈராக்கின் 'அல் பஸ்ரா' நகரம் உலகளவில் மிக அதிக வெப்ப அபாயமுள்ள நகரமாக முதலிடத்தில் உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், கானா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் இந்த வெப்பப் புள்ளிகளில் அதிக எண்ணிக்கையிலான நகரங்களைக் கொண்டுள்ளன.
மும்பை, நாக்பூர் மற்றும் புனே உள்ளிட்ட பல இந்திய நகரங்கள் மார்ச் மாதம் முதல் வெப்ப அலை மற்றும் தொடர்ச்சியான 'ஆரஞ்சு எச்சரிக்கை' (orange alerts) சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதற்கு 'எல் நினோ' (El Niño) முக்கிய காரணமாக அமைந்துள்ளது;
இந்த ஆய்வு நகரங்களை வெறும் வெப்பநிலையின் அடிப்படையில் மட்டும் வகைப்படுத்தாமல், மூன்று முக்கிய காரணிகளின் அடிப்படையில் மதிப்பிட்டுள்ளது: கடுமையான வெப்பத்திற்கு நேரடியாக ஆளாகும் மக்களின் எண்ணிக்கை; பாதிப்புக்குள்ளாகும் தன்மை (குறிப்பாக, காற்றோட்டம் மற்றும் நம்பகமான மின்சாரம் அல்லது குடிநீர் வசதி இல்லாத குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்); மற்றும் வெப்பத்தை எதிர்கொள்ளும் திறன் (இதில் பசுமைப் பரப்பும் திறந்தவெளிகளும் உதவுகின்றன; எனவே, மரங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் மும்பை போன்ற நகரங்கள் இதில் பின்தங்கிய நிலையில் உள்ளன).
ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதுமுள்ள பல முக்கிய நகரங்களில் கடும் வெப்ப பாதிப்பு மற்றும் சமாளிக்கும் திறன் குறைவாக காணப்படுகிறது. இவை இரண்டும் வெப்ப அபாயத்தை அதிகரித்து சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளது.