

வெளிநாட்டிற்கு செல்லும் இந்தியர்கள் தங்களுக்கு தேவையான பொருளை இந்தியாவிற்கு வாங்கி வருவதற்கு மிகவும் விருப்பப்படுவர். இதுவரை இந்தியர்கள் வெளிநாடு சென்று திரும்பும் போது 50,000 ரூபாய் மதிப்புள்ள பொருளுக்கு மட்டுமே சுங்கவரி விலக்கு இருந்தது.
ஆனால் 'பயண உடைமைகளுக்கான விதிகள் 2026 'என்ற பெயரில் அரசு ரூபாய் 75 ஆயிரம் மதிப்புள்ள பொருளை தரை வழியாகவோ, வான் வழியாகவோ அல்லது கடல் மார்க்கமாகவோ இந்தியா வரும் இந்திய வம்சாவளி சுற்றுலா பயணிகள், இந்திய குடிமக்கள் சுங்கவரி இல்லாமல் கொண்டுவர அனுமதிக்கப்படுபவர் என தெரிவித்துள்ளது.
இனிமேல் 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருளை வெளிநாட்டில் இருந்து இந்தியர்கள் வாங்கி வந்தால் முற்றிலும் சுங்க வரி செலுத்த தேவையில்லை. ஒருவேளை அதற்கு மேல் பொருட்கள் வாங்கி வந்தால் மீதமுள்ள தொகைக்கு மட்டுமே சுங்கவரி செலுத்த வேண்டும்.
உதாரணமாக இந்திய குடிமக்கள் ஏதாவது ஒரு வெளிநாட்டிற்கு சென்று ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருளை தங்களது சொந்த பயன்பாட்டிற்காக வாங்கி வருகிறார். ஆனால் அரசு 75 ஆயிரம் ரூபாய் சுங்க வரி விலக்கு என தெரிவித்துள்ளதால் அந்தப் பொருளின் மீதமுள்ள தொகையான 25,000 ரூபாய்க்கு மட்டுமே 35 சதவிகிதம் சுங்கவரி செலுத்த வேண்டும். இந்த சதவிகிதம் உத்தேசமானது. ஏனெனில் ஒவ்வொரு பொருளுக்கும் அவற்றின் வகைகளுக்கு ஏற்ப வரி மாறுபடும்.
இந்தியர்கள் ஓராண்டிற்கு மேலாக வெளிநாட்டில் இருந்து விட்டு தாயகம் திரும்பும்போது பெண்களாக இருந்தால் 40 கிராம் ,ஆண்களாக இருந்தால் 20 கிராம் ஆபரண தங்கம் சுங்கவரி இல்லாமல் கொண்டுவர அனுமதியுண்டு.
இதிலும் தங்கம் ,வெள்ளி, பிளாட்டினம் போன்றவற்றால் செய்யப்பட்ட கற்கள் பதிக்கப்பட்ட அல்லது கற்கள் பதிக்கப்படாத அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணங்களுக்கு மட்டுமே இந்த அனுமதி என்பது குறிப்பிடத்தக்கது.
18 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் ஒரு லேப்டாப்பை வெளிநாட்டிலிருந்து வரி இல்லாமல் இந்தியர்களுக்கு எடுத்து வர உரிமை உண்டு.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் இதுபோல 15,000 ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பத்து ஆண்டுகள் பழமையான விதிகளுக்கு மாற்றாக புதிய விதிகளை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால் இந்த சுங்கவரி வரம்பு உயர்ந்துள்ளது. ஏனெனில் 10 வருடங்களுக்கு முன்பு ஒரு பொருளின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய் என்றால் இப்பொழுது அதனுடைய மதிப்பு 75 ஆயிரமாக இருக்கும் என்பதை கணக்கில் கொண்டே புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.