இந்தியா ரஷ்யாவிற்கு உதவி செய்வதை நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் அதிரடி..!

Donald trump
Donald trump
Published on

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா ரஷ்யாவுக்கு உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவது, உக்ரைனில் ரஷ்யாவின் போரைத் தொடர நிதி உதவி அளிப்பதாக உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.

சமீபத்தில், டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில், "இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்கிறது என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்கள் தங்கள் இறந்த பொருளாதாரங்களை ஒன்றாகவே கீழே கொண்டு செல்லலாம்." என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர் இந்தியாவின் மீது 25% வரி விதிப்பதாக அறிவித்ததோடு, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்களை வாங்குவதற்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவில் புதிய பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் இதற்கு பதிலளித்து, "எங்கள் வெளியுறவுக் கொள்கை, தேசிய நலன்கள் மற்றும் பாதுகாப்பைப் பொறுத்து அமையும். எந்த ஒரு மூன்றாவது நாட்டின் கண்ணோட்டத்திலும் எங்கள் உறவுகளைப் பார்க்கக் கூடாது." என்று தெரிவித்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யா இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் விநியோகஸ்தராக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிரம்பின் இந்த தொடர்ச்சியான விமர்சனங்கள், இரு நாடுகளின் உறவுகளில் ஒரு முக்கிய சவாலாக மாறி வருகிறது.

இதையும் படியுங்கள்:
வெற்றியாளர்கள் ரகசியம்! உங்கள் வாழ்க்கையை மாற்றும் 3 பலவீனங்கள்!
Donald trump

டொனால்ட் டிரம்பின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான ஸ்டீபன் மில்லர், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா நிதியுதவி செய்வதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். டிரம்பின் நிர்வாகம் இந்தியா மீது அழுத்தத்தை அதிகரித்துள்ள நிலையில், மில்லரின் இந்தக் கருத்துக்கள் இரு நாடுகளின் உறவுகளில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் பேசிய மில்லர், "ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் மிகத் தெளிவாகக் கூறுகிறார். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தப் போருக்கு தொடர்ந்து நிதி அளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறினார். மேலும், "ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதில் இந்தியா கிட்டத்தட்ட சீனாவுடன் போட்டி போடுகிறது என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சி அடைவார்கள்." என்றும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம், மில்லர் தனது விமர்சனங்களைத் தணிக்கும் விதமாக, டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையேயான உறவு "மிகவும் சிறப்பானது" என்று குறிப்பிட்டார். இருப்பினும், உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வது குறித்து இந்தியா யோசிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com