புதுச்சேரியில் மார்ச் 9ம் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்!

ஆளுநர் தமிழிசை
ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், மார்ச் 9ம் தேதி துவங்குகின்றது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடங்க உள்ளது

புதுச்சேரி சட்டப் பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் மார்ச் 9 ம் தேதி காலை 9.45 மணிக்கு துவங்க இருக்கிறது. இதற்கான கோப்பிற்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் புதுச்சேரி சட்டப் பேரவை செயலகம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த 12 ஆண்டுகளாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப் படவில்லை.

மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. மத்திய அரசின் அறிவுறுத்தலில்படி, இந்த நடைமுறையை மாற்றி, இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு திட்டமிட்டது. இதற்காக மாநில திட்டக் குழு கூட்டம் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் கூடி இருந்தது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டை தாக்கல் செய்யவும், நிதியை உறுதி செய்யவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் அவசியமாகின்றது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், மார்ச் 9ம் தேதி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதன் பின்பு அலுவல் ஆய்வுக்குழு கூடி, 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் நாள் மற்றும் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து இறுதி செய்யும்.

இந்த பட்ஜெட் தொகையாக ரூ.11,600 கோடி நிர்ணயித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு திட்டக்குழு அனுப்பி உள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் இறுதி செய்யப்பட உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com