மனமொத்த உடலுறவு திருமணத்திற்கு வழிவகுக்காவிட்டால் அதை பாலியல் வன்முறை என்று கூறமுடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர், தனது ஆண் நண்பருடன் 5 வருடங்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லையே தவிர அவர்களுக்கிடையில் உடலுறவு இருந்து வந்தது. தன்னை அவர் திருமணம் செய்து கொள்வார் எனும் நம்பிக்கையில் அவருடன் இணைந்திருந்ததாக அந்தப் பெண் கூறினார். ஆனால், தற்போது தனது ஆண் நண்பர், தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும், அதனால் 5 ஆண்டுகளாக இணைந்திருந்த போது அவர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதை கற்பழிப்பு எனக்கருதி அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தை அணுகினார்.
பெண்ணின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கர்நாடக உயர்நீதிமன்ற பெஞ்ச், அந்த வழக்கில் அளித்துள்ள தீர்ப்பு தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அவர்கள் இருவரும் ஒரு சில நாட்களோ அல்லது மாதங்களோ மட்டுமே சேர்ந்து வாழவில்லை. 5 முழு வருடங்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்திருக்கிறார்கள். அப்போது மனமொத்து உடலுறவில் ஈடுபட்டு விட்டு இப்போது அந்த உறவு திருமணத்தில் முடியவில்லை என்பதற்காக சம்மந்தப்பட்ட ஆணை பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவர் எனக் கருத முடியாது. இளம்பெண் முதல்முறை, ஆண் நண்பர் தன்னை வற்புறுத்தி உறவில் ஈடுபடச் செய்ததாகக் குற்றம் சுமத்தினாலும் அதை நீண்ட காலமாக பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்தி நடத்தப்பட்ட உறவாகக் கருத முடியாது. ஐந்து ஆண்டுகளாக ஒரு பெண்ணை வற்புறுத்தி இத்தகைய உறவில் நீடிக்கச் செய்திருக்க முடியாது. எனவே குற்றம் சுமத்தப்பட்ட நபரின் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை மற்றும் அவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்வதாக நீதிபதி எம் நாகபிரசன்னா உத்தரவிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் கூற்றுப்படி, அவரும் புகார்தாரரும் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தனர் மற்றும் அவர்களின் உறவு காதலாக வளர்ந்தது. அவர்கள் ஐந்து வருடங்களாக காதலித்து, உடல் உறவைப் பேணி வந்தனர் ஆனால் சாதி வேறுபாடு காரணமாக திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. ஆகவே இந்த வழக்கில் இருவரது சம்மதத்தின் பேரிலும் தான் உறவு கொண்டிருக்கிறார்கள். சாதி தடையாக இருந்த காரணத்தால் அந்த உறவு திருமணத்தில் முடியவில்லை. எனவே இதை பிரிவு 376 ன் கீழ் தண்டனைக்குரியதாகக் கருத முடியாது என பெண்ணின் கற்பழிப்பு குற்றச்சாட்டை நிராகரிக்கும் போது உயர்நீதிமன்ற பெஞ்ச் கூறியது.