குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000... கர்நாடகாவில் தொடங்கி வைத்த முதலமைச்சர்!

Gruha Lakshmi project
Gruha Lakshmi project
Updated on

கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கும் கிரக லட்சுமி திட்டத்தை முதலமைச்சர் சித்தராமையா தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கு பிறகு வரும் செப்டம்பர் மாதம் முதல் பணம் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது.

ஆட்சியை கைப்பற்றிய நிலையில், சித்தராமையா தலைமையிலான அரசு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கும் கிரக லட்சுமி திட்டத்தைக் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேற்று தொடங்கிவைத்தார். இத்திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி முதல் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் ஒரு கோடியே 28 லட்சம் குடும்பங்கள் பயனடையும் என கூறியுள்ள கர்நாடக அரசு, திட்டத்தில் இணைய நேரிலோ, அரசின் அதிகாரபூர்வ இணையதளத்திலோ பதிவு செய்யலாம் என கூறியுள்ளது.

பயனாளிகளின் பெயர்களைப் பதிவு செய்வதற்கு வீடு வீடாகச் சென்று பதிவு செய்யும் பணி விரைவில் தொடங்கும் என்றும் 1902 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் கிரகலட்சுமி திட்டம் குறித்து அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே திட்டத்தில் பதிவு செய்ய முடியும். பிபிஎல் அல்லது அந்த்யோதயா பிரிவின் கீழ் வரும் பெண்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். ஆண்டு வருமான வரம்பு ஆண்டுக்கு ரூ.2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com