விண்வெளி ஆராய்ச்சியை எளிதாக அணுக விரைவில் விண்வெளியில் ஏஐ ஆய்வகத்தை அமைக்கப்படவுள்ளதாக ஹைதராபாத்தைச் சோ்ந்த 'டேக் மீ 2 ஸ்பேஸ்' என்ற நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏஐ தற்போது உலகளவில் மிகவும் பிரபலமாகி வருகிறது. அதற்கு காரணம் அதன் அதிநவீன வசதிகளே ஆகும். எளிதாக தரவுகளை அறிந்துக்கொள்ளவும், கற்பனை உலகத்தை நமக்கு காட்டுவதிலும் என ஏஐ பல வசதிகளை நமக்கு செய்துக்கொடுக்கிறது. உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் வந்துவிட்டது. ஒரு இடத்தை தவிர. அது விண்வெளிதான். தற்போது விண்வெளியிலும் ஏஐ ஆய்வகத்தை இந்தியா அமைக்க உள்ளது. இதன்மூலம் பல வசதிகளும் நன்மைகளும் கிடைக்கும்.
மேகமூட்டம் போன்ற சில காரணங்களால் செயற்கைக்கோள்கள் அனுப்பும் 40 சதவீத தரவுகளை அணுக முடியவில்லை. அதே சமயத்தில் பூமியில் உள்ள மையங்களுக்கு அனுப்பப்பட்டு அதன்பிறகே அந்த தரவுகளை பெறும் சூழல் உள்ளது. இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இது நமக்கு நன்றாகவே தெரியுமல்லவா?
எனவே விண்வெளியில் நேரடியாக இந்த தரவுகளை அணுகி பயனாளர்களுக்கு சரியான தகவல்களை பரிமாற மற்றும் தாமதத்தை குறைக்கவும் விண்வெளியில் இந்த ஏஐ ஆய்வகத்தை அமைக்கப்படவுள்ளனர்.
அதற்காக இந்த வருடம் டிசம்பர் மாதம் சுற்றுப்பாதை உள்கட்டமைப்பு- தொழில்நுட்ப விளக்கமாதிரி (எம்ஓஐ-டிடி) என்ற ஏஐ ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது. இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-60 ராக்கெட் மூலம் டிசம்பா் மாதம் இது விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது.
மேலும் இதன்மூலம் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மற்றும் காடுகள் அழித்தல் கண்காணிப்பு, கடல்சார் பணிகள் மேற்பார்வை போன்ற அனைத்து கண்காணிப்புகளையும் எளிதாக செய்ய முடியும்.
இந்த ஆய்வின் முதற்கட்டமாக மலேசியாவில் உள்ள ஒரு முக்கிய பல்கலைக்கழகமும், இந்தியாவிலிருந்து 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவா் குழுவினரும் இணைந்துள்ளனர். தற்போது புவி கண்காணிப்பு சார்ந்த ஆய்வுகளே செய்யப்படவுள்ள நிலையில், விரைவில் அனைத்து துறைகளுக்கும் பயனளிக்கும் விதமாக இந்த ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அறிவியல் வளர்ச்சியால் இந்த உலகம் அடுத்தக்கட்டத்திற்கு செல்லவுள்ளது என்பது மட்டும் சந்தேகமில்லாமல் தெரிய வருகிறது.