

ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போரை நடத்தி வருகின்றன. இந்த போரின் போது இஸ்ரேல் நடத்திய துல்லிய தாக்குதலில் , ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமெனி உயிரிழந்தார். அதற்கு பழிவாங்கும் வகையில் ஈரானிலுள்ள புரட்சிகர படை , தங்களைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
நேற்று(மார்ச் 11) அன்று, அமெரிக்காவிற்கு சொந்தமான 'சஃபேசியா டிரான்ஸ்போர்ட்' நிறுவனத்தின் ‘சேப்சீ விஷ்ணு' (Safesea Vishnu) என்ற கச்சா எண்ணெய் கப்பல், மார்ஷல் தீவுகளின் கொடியுடன் ஈராக்கின் பாஸ்ரா துறைமுகம் அருகே பாரசீக வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலின் மீது ஈரானிய படை நீருக்கடியில் ட்ரோன் மூலம் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் கச்சா எண்ணெய் கப்பல் மிக கடுமையான சேதம் அடைந்தது.
இந்தக் கப்பலில் மொத்தமாக 16 இந்தியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த கடுமையான தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மீதமுள்ள 15 இந்திய பணியாளர்கள் உடனடியாக மீட்கப்பபட்டு, இராக்கில் உள்ள பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை ஈராக்கில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஈரான் கடற்படை தொடர்ச்சியாக ட்ரோன் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே பகுதியில் பயணம் செய்த மால்டிஸ் நாட்டு கொடியினை கொண்ட 'செஃபிரோஸ்' (Zefyros) என்ற வர்த்தக கப்பல் மீதும் ஈரான் கடற்படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலை ஈரான் கடற்படை, "வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லாத நீருக்கடியில் செல்லும் படகுகள் மூலம் , கப்பல்களின் மீது மோதச் செய்து வெடிக்க வைத்திருக்கலாம்" என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு தாக்குதல் சம்பவங்களுக்கும் ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் கடுமையான தாக்குதல் நடத்தியதில் இருந்து, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடியுள்ளது. உலகின் கச்சா எண்ணெய் வர்த்தக கப்பல்கள் 20% இந்த வழித்தடத்திலேயே பயன்படுத்தி வருகின்றன. இதனால் சர்வதேச அளவில் இந்த நீரினைக்கு பெரிய முக்கியத்துவம் உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பலையும் தாக்கி அழிப்போம் என்று ஈரான் முன்பே கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தது. அதே நேரத்தில் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே இந்த வழித்தடத்தினை பயன்படுத்த ஈரான் அனுமதித்துள்ளது.
தங்களின் எச்சரிக்கையை மீறி அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு கப்பல்கள் இந்தப் பகுதிக்கு வந்தால் கொளுத்துவோம் என்றும் ஈரான் மீண்டும் கூறியிருந்தது. தற்போது அமெரிக்கா ஈரான் போர் 12 வது நாளை எட்டி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரானிய கடற்படை கடலில் புதைத்திருந்த 16 கன்னிவெடிகளை அமெரிக்க ராணுவம் அகற்றியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இனி போர் நடத்த ஈரானில் ஏதுமில்லை ,விரைவில் போர் முடியும், என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஈரான் தாக்குதலில் உயிரிழந்த இந்தியரின் உடலை இந்தியா கொண்டு வரவும் , மீட்கப்பட்ட 15 பேருக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு வசதிகளை வழங்கவும் இந்திய தூதரகம் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் X தளத்தில் பாதிக்கப்பட்ட கப்பல் எரியும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.