இந்தியா தனது எரிசக்தி தேவையில் பெரும் பகுதியை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. நாட்டில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயில் சுமார் 85 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படுகிறது. அதேபோல் இயற்கை எரிவாயுவில் 45 முதல் 50 வரை இறக்குமதி சார்பு உள்ளது. இந்த இறக்குமதியின் பெரும் பகுதி வளைகுடா நாடுகளில் இருந்து கடல் வழியாக வருகிறது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் இந்தியாவை அடைகின்றன. எண்ணெயைத் தவிர்த்து, பிற ஏற்றுமதி, இறக்குமதிகளை இந்தியா ஹார்மோஸ் ஜலசந்தி வழியாகத் தான் செய்து வருகிறது. இந்த வினியோகத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, இயற்கை எரிவாயு தட்டுப்பாடு மட்டுமின்றி பல முக்கிய பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அந்த வகையில் இதனால் இந்தியாவில் என்னென்ன? பாதிப்புகள் ஏற்பட உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்தப் போர் பதற்றத்தினால் இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து, இறக்குமதி செலவை அதிகரிக்கும். முக்கியமாக, இந்திய பங்குச் சந்தைகளில் பெரிய அளவிலான முதலீட்டு இழப்புகள் (ரூ. 10 லட்சம் கோடி வரை) ஏற்கனவே உணரப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி இந்தப் போரை சுற்றி இருப்பதால், இந்த வீழ்ச்சி தொடரலாம்.
வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்கள் இருக்கிறார்கள். போர் தொடர்ந்தால் இவர்களின் நிலை கேள்விக்குறியாவதுடன், இவர்களிடம் இருந்து இந்தியாவிற்கு வரும் பணத்திலும் சிக்கல் ஏற்படலாம்.
கடல் வணிகப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் செங்கடல் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுவதால் சரக்கு கப்பல் கட்டணம் மற்றும் காப்பீட்டு தொகை பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் மருந்து பொருட்கள் எஃகு மற்றும் உதிரி பாகங்கள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வைர வர்த்தகத்தின் மையமாக விளங்கும் துபாய் மற்றும் இஸ்ரோல் உடனான நேரடி தொடர்பு பாதிக்கப்படுவதால் நகை ஏற்றுமதி மற்றும் விற்பனை மந்தமடையக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவின் நிதியுதவியுடன் ஈரானில் கட்டப்பட்டுள்ள 'சாபஹார் துறைமுகம்'துறைமுகம் மூலம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியைத் தவிர்த்து பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்யலாம் என்பது தான் இந்தியாவின் பிளான்.
ஆனால் ஈரானில் நடந்து வரும் இந்தத் தாக்குதலில் இந்தத் துறைமுகம் பாதிக்கப்பட்டால், நிச்சயம் அது இந்தியாவிற்கு இன்னொரு பெரிய அடியாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
விவசாய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது உரங்கள். குறிப்பாக நைட்ரஜன் அடிப்படையிலான யூரியா உரம் தயாரிக்க இயற்கை எரிவாயு முக்கிய மூலப்பெருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இங்கும் பல உர ஆலைகள் எரிவாயு அடிப்படையிலேயே செயல்படுகின்றன. எனவே இயற்கை எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டால் உர உற்பத்தி நேரடியாக குறையும் அபாயம் உள்ளது. குறிப்பாக யூரியா மற்றும் அமோனியா தயாரிப்பில் சிக்கல் ஏற்படலாம். இதனால் உரங்களின் கிடைப்பதில் தட்டுப்பாடு உருவாகி அவற்றின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய உற்பத்தி செலவு அதிகரித்து உணவுப்பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோ ரசாயன பொருட்களே பிளாஸ்டிக் தொழிலின் அடிப்படை. எனவே தண்ணீர் பாட்டில்கள், உணவு பொட்டல பைகள், வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள், மருத்துவ பிளாஸ்டிக் உபகரணங்கள் போன்றவற்றின் உற்பத்தி பாதிக்கப்படும். எண்ணெய் விலை உயர்ந்தால் பிளாஸ்டிக் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். அந்த வகையில் தற்போது பிளாஸ்டிக் கவர்களின் விலை ரூ.10 அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் வருந்துகின்றனர். அதாவது சிறிய பிளாஸ்டிக் கவர்கள் 5 ரூபாய் வரையிலும் மீடியம், பெரியது என 10, 15 ரூபாயும் அதிகரித்துள்ளது.
அதேபோல் இந்தியாவில் பெரிய ஜவுலி தொழிலில் பாலிஸ்டர், நைலான் போன்ற செயற்கை நார்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நார்கள் அனைத்தும் பெட்ரோ ரசாயன பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. எனவே எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டால் பாலியஸ்டர் துணி உற்பத்தி குறையும். இதனால் துணி விலையும் அதிகரிக்கும்.
பெட்ரோ ரசாயன மூலப்பொருட்கள் மூலம் பல மருந்துகள் மற்றும் தொழில்துறை ரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டால் சில மருந்துகள் மற்றும் ரசாயனங்களின் உற்பத்தியும் பாதிக்கப்படலாம்.
இந்தியாவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் பல வழிகளில் ஒன்று இயற்கை எரிவாயு அடிப்படையிலான மின் நிலையங்கள் ஆகும். நாட்டில் செயல்படும் சில முக்கிய மின் நிலையங்கள் எரிவாயுவை எரிபொருளாக பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. இந்த மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறையக்கூடும். இதனால் மின்விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் முக்கிய பொருட்களில் ஒன்று பிட்டுமேன் ஆகும், இது சாலை கட்டுமானத்தின் அடிப்படை மூலப்பொருளாக கருதப்படுகிறது. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில சாலைகள், நகர சாலைகள் போன்ற பெரும்பாலான சாலைகள் பிட்டுமேன் அடிப்படையிலான தார் சாலைகளாகவே அமைக்கப்படுகின்றன. எனவே கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டால் அதன் நேரடி தாக்கம் சாலை கட்டுமானத்துறையில் உணரப்படும்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு விமான போக்குவரத்து துறையையும் நேரடியாக பாதிக்கிறது. விமானங்கள் இயக்கப்படுவதற்கு பயன்படுத்தப்படும் விமான எரிபொருள் கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எனவே எண்ணெய் விலை அதிகரித்தால் விமான எரிபொருள் விலையும் உயரும். இதனால் விமான நிறுவனங்களின் இயக்க செலவு அதிகரிக்கும். அந்த செலவை சமநிலைப்படுத்தும் வகையில் பயணிகளிடம் வசூலிக்கப்படும் விமான கட்டணமும் உயர வாய்ப்பு உள்ளது.
வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் தற்போது திருமணங்களுக்கு மொத்தமான ஆர்டர் எடுத்து உணவு விநியோகம் செய்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 15 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்த சரக்கு போக்குவரத்தில் சுமார் 65 முதல் 70 சதவீதம் வரை சாலை வழியாகவே நடைபெறுகிறது. லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் பெரும்பாலும் டீசல் எரிபொருளை பயன்படுத்துகின்றன. எனவே கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தாலோ அல்லது விலை அதிகரித்தாலோ அதன் நேரடி தாக்கம் சரக்கு போக்குவரத்து துறையில் தெரியும். டீசல் விலை உயர்ந்தால் லாரி போக்குவரத்து செலவு அதிகரிக்கும். சரக்கு கட்டணங்கள் உயரும். தொழிற்சாலைகளின் உற்பத்தி செலவும் கூடும். இதன் தாக்கம் இறுதியில் விலைவாசி உயர்வாக நுகர்வோரிடம் சென்று சேரும்.
சுருக்கமாக, இந்த போர் நீண்ட காலம் நீடித்தால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் ஆபத்தாக அமையும்.