

உலகளாவிய மருத்துவத்துறையில் நோய்கள் மீதான பலவிதமான ஆராய்ச்சிகளும் புதிய புதிய மருந்துகளின் கண்டுபிடிப்புகளும் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அதேபோன்று அறுவை சிகிச்சை துறையிலும் நவீன முன்னேற்றங்கள் பலவற்றை மருத்துவ குழுவினர் ஆராய்ந்து அதை செயல்படுத்தும் முறையில் இறங்கியுள்ளனர் .
அந்த வகையில் உலக மருத்துவத்துறையில் ஒரு புதிய முயற்சி மற்றும் வியத்தகு முன்னேற்றமாக சுமார் 3000 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளி ஒருவருக்கு ரோபோ 2 உதவியுடன் 90 நிமிடங்களில் மாற்று சிறுநீர் குழாய் பொருத்தி சாதனை புரிந்துள்ளார் மருத்துவர் ஒருவர். அறுவைசிகிச்சை மருத்துவத்தில் இந்த பெருமைக்குரிய புதிய மைல்கல் சாதனைக்கு சொந்தக்காரர் தான் இந்திய மருத்துவரான சையது முகமது கவுஸ்.
சீனாவில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள நோயாளிக்கு சுமார் 3000 கிலோமீட்டர் தொலைவில் இருந்து ரோபோட் மற்றும் பயிற்சி இணைய வசதியுடன் நடைபெற்ற அறுவை சிகிச்சை மூலம் 90 நிமிடங்களில் மாற்று சிறுநீர் குழாய் பொருத்தி சாதனை நிகழ்த்தியுள்ளார் இந்தியாவின் தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த சிறுநீர கவியல் துறை மருத்துவரான சையது முகமது கவுஸ்.
இவர் சீனாவின் வூஹான் நகரில் உள்ள டோங்ஜி மருத்துவமனையில் ரோபோ அறுவை சிகிச்சையில் சிறப்பு பயிற்சிகளை கற்றவர். இந்நிலையில் தான் கற்ற ரோபோட்டிக் மருத்துவமுறையின் மூலம் வூஹானில் இருந்து சுமார் 3,000 கி.மீ. தொலைவில் உள்ள ஹைதராபாத் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு மாற்று சிறுநீர்க்குழாய் பொருத்தும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற சீனாவில் உருவாக்கப்பட்ட ரோபோட்டிக் சிகிச்சையில் அதிவேக 5G இணைய இணைப்பு, நேரடி HD 3D கேமரா காட்சிகள், மருத்துவரின் கை அசைவுகளை உடனுக்குடன் பிரதிபலிக்கும் ரோபோ கரங்கள் போன்ற முக்கிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டது.
ஹைதராபாத் மருத்துவமனையில் நோயாளிக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டு, சிறப்பு ரோபோ கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்ட அதேநேரம் வூஹானில் உள்ள மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹைதராபாத்தில் உள்ள ரோபோ கருவிகளை இயக்கி அறுவை சிகிச்சையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதில் பயன்படுத்தப்பட்ட 5G தொழில்நுட்பம் காரணமாக கட்டளைகள் சுமார் 200 மில்லி வினாடிகளில் பரிமாறப்பட்டதால் தாமதம் மிகக் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அறுவை சிகிச்சை நடந்தபோது எதிர்பாராத விதமாக நிகழும் ஆபத்தைத் தடுக்கும் வகையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவக் குழுவும் அறையில் இருந்தது. அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக தலையிட ஏற்ற வகையில் அந்தக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.
இத்தனை முன்னேற்பாடு வசதிகளுடன் சிறுநீரக குழாய் மீள் இணைப்பு அறுவை சிகிச்சை(Robot-assisted ureteral reimplantation) வகையைச் சேர்ந்த இந்த ரோபோட்டிக் அறுவை சிகிச்சையை சுமார் 90 நிமிடங்களில் வெற்றிகரமாக செய்து முடித்தார் மருத்துவர் சையது முகமது கவுஸ் என்பது சிறப்பு.
குறிப்பாக மருத்துவ துறையின் ஆச்சரியங்களுள் ஒன்றான இந்த நிகழ்வு இந்தியா மற்றும் சீனா நாடுகள் இடையிலான மருத்துவ ஒத்துழைப்பிலும், தொலைதூர ரோபோட்டிக் அறுவை சிகிச்சை துறையிலும் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.மேலும் இந்திய மருத்துவத் துறையில் இது புதிய முயற்சி என சக மருத்துவர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.