

ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் மக்கள் வரும் ஜூலை 1-ம்தேதி முதல்இனி இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஏனெனில், ரெயிலில் உரிய டிக்கெட் இல்லாமல் ஓசியில் பயணிப்போர் மீது, ரெயில்வே சட்டத்தின் படி, இதுவரை 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் வரும் ஜூலை 1-ம்தேதி முதல் 500 ரூபாய் வசூலிக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் முக்கியமாக ஒன்றாக இருப்பது ரெயில் சேவை. அந்த வகையில் இந்திய ரெயில்வே நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரெயில்களை இயக்குகிறது, இதில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள 13,000 பயணியர் ரெயில்களில் தினந்தோறும் 2.50 கோடிக்கும் அதிகமானோர் கல்வி, வேலை, சொந்த வேலை காரணமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பெரும்பாலானோர் நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலும் ரெயில்களில் டிக்கெட் பதிவு செய்து பயணிக்கவே விரும்புகின்றனர். ரெயில்களில் டிக்கெட் செலவு மிக மிகக் குறைவு. இதனால்தான் பேருந்து, விமானம் போன்றவற்றை விட ரெயில் பயணத்தை பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
ரெயில்வே நிர்வாகமும் பயணிகளின் வசதிக்காகவும், அவர்களின் செலவை குறைப்பதற்காகவும் பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது.
இந்நிலையில் தான் ரெயிலில் உரிய டிக்கெட் இல்லாமல் ஓசியில் பயணிப்போர் மீது, இதுவரை 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் வரும் ஜூலை 1-ம்தேதி முதல் 500 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த உத்தரவை ரெயில்வே வாரியம் அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் ஜூன் 18-ம்தேதியன்று பிறப்பித்துள்ளது. அதேபோல, வேறு ஒருவர் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் பயணிப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய ரெயில்வே எச்சரித்துள்ளது.
ரெயிலில் உரிய டிக்கெட் இல்லாமல் ஓசியில் பயணம் செய்பவர்கள் மீது, ரெயில்வே சட்டம் 1989ன் படி, 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த அபராத தொகையை 500 ரூபாயாக உயர்த்தி, ரெயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒருவேளை பயணிகள் அபராதம் செலுத்த மறுத்தால் வழக்கு நீதிமன்றம் வரை செல்லும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அனுமதி இல்லாமல் ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் பொருட்களை விற்பனை செய்பவர்கள் அல்லது பயணிகளைப் பொருட்களை வாங்கத் தூண்டுபவர்கள் மீதான விதிமுறைகளையும் ரெயில்வே நிர்வாகம் கடுமையாக்கியுள்ளது.
புதிய விதிகளின்படி, இத்தகைய நிகழ்வுகளுக்கு 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தத் தவறினால் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் இக்குற்றத்தைச் செய்பவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
அதுமட்டுமின்றி புதிய ரெயில்வே விதிகளின்படி, ஒருவர் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் வேறு ஒருவர் பயணம் செய்வது கண்டிறியப்பட்டால் அந்த பயணியிடம் இருந்து டிக்கெட் கட்டணத்துடன் குறைந்தபட்சம் 500 ரூபாய் கூடுதல் தொகையாக வசூலிக்கப்படும் என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ஒருவேளை பயணிகள் அபராதம் செலுத்த மறுக்கும் பட்சத்தில் வழக்கு நீதிமன்றம் வரை செல்லும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ள இந்தப் புதிய விதிமுறைகள் குறித்த தகவல்களை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்குத் தெரிவிக்குமாறு அனைத்து மண்டல ரெயில்வேக்களுக்கும் ரெயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது, டிக்கெட் முறைகேடு மற்றும் ரெயில் நிலைய வளாகங்களில் நடைபெறும் அத்துமீறல் மற்றும் விதிமீறல்களைத் தடுப்பதன் மூலம் பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் சௌகர்யமான பயண அனுபவத்தை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.