சமீபத்தில் மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் இந்திய அதிகாரியான சதேந்திர சிவால் என்பவர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐக்கு உளவு பார்த்தாக உத்தரப்பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் இந்திய பயங்கரவாத எதிர்ப்பு படை நடத்திய விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
சதேந்திர சிவால் ஹபூரில் உள்ள ஹாமாஹியுதீன்பூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த 2012ம் ஆண்டிலிருந்து சிவால் மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவைத் தளமாகக் கொண்ட பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி சந்தேகத்தின் பேரில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள லக்னோவில் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் (ATS) சிவாலை கைது செய்தனர். அதன்பின் அவருக்கு எதிராக லக்னோவில் உள்ள ATS காவல் நிலையத்தில் தண்டனை சட்டம் பிரிவு 121A, அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் 1923ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு, சிவாலிடம் ATS நடத்திய விசாரணையில், அவர் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டது தெரியவந்தது. இதனால் பிப்ரவரி 16ம் தேதி வரை அவர் கடுங்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து ATS இன்ஸ்பெக்டர் ராஜீவ் தியாகி பேசுகையில், “பூஜா மேஹ்ரா என்று தனது வலைதளப் பக்கத்தை ஆரம்பித்த ஒரு பெண்ணுடன், சென்ற ஆண்டு சிவால் தொடர்பு கொண்டிருக்கிறார். அந்த பெண் சிவாலை 'Honey Trap' செய்து, பணத்திற்காக இந்திய விமானைப்படை, இந்திய கடற்படையின் போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட இந்தியாவின் ஆயுத அமைப்புகள் தொடர்பான ரகசிய ஆவணங்களைப் பகிரும்படி அந்த பெண் கூறியிருக்கிறார். அதனை அப்படியே சிவாலும் அந்த பெண்ணுடன் பகிர்ந்திருக்கிறார்.
மேலும் அந்த பெண்ணின் கணக்கை பாகிஸ்தான் உளவுத்துறை இயக்கிவந்தது என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. அந்த பெண்ணுக்கு அனுப்பிய அனைத்து ஆவணங்களும் இன்னும் சிவாலின் தொலைப்பேசியில் உள்ளதாக அவரே கூறியிருக்கிறார். மேலும், தான் தவறு செய்துவிட்டதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அவரின் போனை முழுவதுமாக பரிசோதனை செய்யப்பட்ட உள்ளோம்.” இவ்வாறு அவர் கூறினார்.