

குவைத் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதலில் இந்தியத் தொழிலாளி பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மேற்கு ஆசியப் போரில் இதுவரை பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போரின் ஒரு பகுதியாக, ஈரான், வளைகுடா நாடுகளின் எரிசக்தி தளங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆலை மீது இன்று அதிகாலை ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இந்திய தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒரு சேவைக் கட்டிடம் சேதமடைந்தது. வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" (Operation True Promise) தாக்குதலின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. "குவைத் அரசுக்கு எதிரான ஈரானின் ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக, மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள சேவைக் கட்டிடம் தாக்கப்பட்டதில், இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததோடு, கட்டிடத்திற்கும் கணிசமான பொருள் சேதம் ஏற்பட்டது" என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாத்திமா அப்பாஸ் ஜவ்ஹர் ஹயாத் தெரிவித்தார்.
குவைத்தின் மின்சார அமைச்சகம் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தி, சேதமடைந்த கட்டிடத்தில் மீட்புப் பணிகள் மற்றும் அவசர திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அவசரக்காலக் குழுக்கள் சேதமடைந்த இடத்தை பாதுகாத்து, செயல்பாடுகளைத் தொடர நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தை பாதுகாத்து வருகின்றனர்.
நேற்று கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் துயரமான முறையில் உயிரிழந்ததற்கு குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. சாத்தியமான அனைத்து ஆதரவையும் உதவியையும் வழங்குவதற்கு தூதரகம் குவைத் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது என்று குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.