

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக வெளிநாட்டுப் பயணமாக தென் கொரியா சென்றுள்ளார் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா.
தென்கொரியாவில் ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ்(HHI) நிறுவன உயர் அதிகாரிகளுடன் தமிழக அமைச்சர் கீர்த்தனாவின் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. சந்திப்பின்போது தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்து HHI அதிகாரியுடன் கீர்த்தனா ஆலோசனை ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கப்பல் கட்டும் திட்டத்தை செயல்படுத்த HHI நிறுவனத்துக்கு உரிய வழிவகை செய்யப்படும் என அமைச்சர் கீர்த்தனா வாக்குறுதி அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
திட்டம் குறித்த விவரங்கள்:
தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் துறைமுகப் பகுதிகளில் சுமார் ரூ.18,000 கோடி முதல் ரூபாய் 40,000 கோடி வரையிலான மதிப்பீட்டில், இந்தியாவின் முதல் மெகா கிரீன்ஃபீல்ட் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட உள்ளது. அதிநவீன திரவ இயற்கை எரிவாயு(LNG) ஏற்றிச்செல்லும் கப்பல்கள் மற்றும் மாபெரும் சரக்குக் கப்பல்கள் இங்கு தயாரிக்கப்பட உள்ளன. இதன் மூலம் சுமார் 55,000 நபர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்திய அரசின் 2047 கடல்சார் தொலைநோக்கு திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் முள்ளக்காடு, பழைய காயல் உள்ளிட்ட இடங்களில் இதற்கான நிலங்கள் அடையாளம் காணப்பட்டன. இத்திட்டத்தினால் தங்களின் உயிர்நாடியான உப்பு உற்பத்தி பாதிக்கப்படும் என்று உப்பளத் தொழிலாளர்கள் கவலை தெரிவித்து எதிர்ப்புகளையும் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்த கால ஆட்சியின் பொழுது இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் கப்பல் கட்டும் தொழில் தொடங்குவதற்கு முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாகவும், முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாகவும், தொழில் வளர்ச்சியை துரிதப்படுத்துவது மற்றும் மாநிலத்தை உலகளாவிய ஒரு முதன்மையான முதலீட்டுத் தளமாக நிலை நிறுத்துவது ஆகிய தனது லட்சியத்தில் உறுதியாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.