

சர்வதேச சூழல் மற்றும் தற்போதைய விலை நிலவரத்தை நோக்கினால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றங்கள் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் முதலே எரிவாயு விநியோகத்தில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.
சமையல் கேஸ், கச்சா எண்ணெய் ஆகியவற்றை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேரடியாக மக்கள் தலையில் தான் இறங்கியுள்ளது. அதாவது ஓட்டல்களில் உணவுகளின் விலை உயர்வால் மக்களிடையே கடும் பாதிப்பை ஏற்பத்தியுள்ளது.
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக ஓட்டல்கள், சிறுகடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
அதேநேரம் பெட்ரோல்-டீசல் விலையில் சமீப காலமாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதுவும் ஒருபுறம் மக்களை பாதித்து வருகிறது.
இவ்வாறு ஒவ்வொன்றின் விலையில் தொடர்ந்து அதிகரித்து சாமானிய மக்கள் தலையில் இடிமேல் இடியாக தாக்கும் நிலையில் தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலையும் ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 3 மாதங்களில் இது 2வது முறையாக உயர்த்தப்பட்டு தற்போது வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.957.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர சிலிண்டர் கொண்டு வருபவருக்கு ரூ.50 சேர்த்தால் வீட்டு கேஸ் சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டி உள்ளது.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் கேஸ் சிலிண்டருக்கும் மட்டுமே ரூ.1000 செலுத்துவது குடும்பத்தில் பெரிய சுமையை ஏற்படுத்தும்.
ஏற்கனவே விலைவாசி உச்சத்தை எட்டி உள்ள நிலையில் கேஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தால் நடுத்தர மக்கள், அடிதட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் வரும் நாட்களில் மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதால் எப்படி குடும்பத்தை நடத்துவது என்பது தெரியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
நடுத்தர வர்க்கத்தினருக்கு நிறைவான வருமானம் இல்லாத நிலையில் சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது பெண்களை பெரிதும் பாதித்துள்ளது. மேலும் சிலிண்டர்கள் முன்பதிவு செய்து சிலிண்டர்கள் உரிய நாட்களில் கிடைக்காதததால் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். ஏற்கனவே விலைவாசி உயர்வால் சிக்கித்தவிக்கும் இல்லத்தரசிகள், இந்த விலையேற்றதால் கொதிப்படைந்துள்ளனர்.
இதற்கிடையே நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக தமிழக மக்களுக்கு அறிவித்திருந்தார்.
தற்போது சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ள அந்த சூழ்நிலையில் முதலமைச்சர் அறிவித்த அந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்துமாறு இல்லத்தரசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் தவெக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் இலவசம் என்பது சாத்தியமா என்ற கேள்வி பல்வேறு தரப்பினரிடையே எழுந்துள்ளது.
தவெக அறிவித்தபடி, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்க வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் நிதி ஆதாரங்கள் மலைக்க வைக்கின்றன. இப்போதைய மதிப்பீட்டின்படி, இந்த திட்டத்தை செயல்படுத்த வருடத்துக்குச் சுமார் 12,408 கோடி ரூபாய் நிதி தேவைப்படும்.
இன்னொருபுறம் தமிழ்நாட்டின் நிதி நிலைமை சவாலான கட்டத்தில் உள்ளது. வரும் 2026-27 நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த கடன் சுமை சுமார் 11,00,000 கோடி ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பல்வேறு நலத்திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வளவு பெரிய தொகையை சிலிண்டர் மானியத்திற்காகத் திரட்டுவது முதலமைச்சர் விஜய்க்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
இதற்கிடையே இதற்கு சாத்திய கூறுகள் உள்ளதாக கூறியுள்ள எண்ணெய் நிறுவன அதிகாரிகள், அவர்களின் கணக்கீட்டின்படி, ஒரு சிலிண்டர் விலை ரூ.1000 என்றால் ஆறு சிலிண்டர்கள் ஆண்டிற்கு 6000 ரூபாய்மட்டுமே செலவாகும். ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த 12,000 கோடி ரூபாய் வரை தேவைப்படலாம். ஏற்கனவே பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் சிலிண்டருக்ககான மானிய தொகையை பயனாளிகள் வங்கிக்கணக்கில் மத்திய அரசு செலுத்தி வருகிறது. இதை முன் உதாரணமாக பின்பற்றி, மாநில அரசு இந்த 6 சிலிண்டர்களுக்கான தொகையை மக்களின் கணக்கில் செலுத்தினால், முறைகேடுகளைத் தவிர்த்து இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என அவர்கள் கருதுகிறார்கள்.
அதன்படி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆண்டுக்குச் சுமார் 12,408 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய நிதி நிலைமை இத்திட்டத்திற்குப் பெரும் சவாலாக உள்ளது.