

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், புகைப்படம் மட்டும் பதிவேற்றும் செயலியாக இருந்து பின்பு புது புது வசதிகள் கொண்டுவரப்பட்டு சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் இன்ஸ்டாகிராம் தனது தனியுரிமை கொள்கையில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் அம்சத்தை அறிமுகப்படுத்திய மெட்டா நிறுவனம் தற்போது தனது நேரடிச் செய்திகளில் உள்ள முக்கிய பாதுகாப்பு அம்சமான எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்(End-to-End Encryption - E2EE) வசதியை மே 8, 2026 முதல் நீக்குவதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தினால், செய்திகள் மற்றும் மீடியாக்கள் பாதுகாப்பற்றதாக மாறும் என அஞ்சப்படுகிறது. பயனர்கள் தங்கள் பழைய சாட்களை மே 8க்குள் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மே 8, 2026க்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் இந்த அம்சம் செயல்படாது. இந்த அறிவிப்பு, முக்கிய பாதுகாப்பு அம்சத்தை நிறுத்துவதால் மெட்டா நிறுவனம் பயனர்கள் அனுப்பும் செய்திகள், தரவுகளை பார்க்க முடியும். அதனை விளம்பர நோக்கத்திற்காகவும், கன்டென்ட்களை கவனிக்கவும், சட்ட ரீதியான கோரிக்கையின் அடிப்படையில் அதை பல்வேறு முகமைகளுக்கும் அனுப்ப முடியும். இந்த நடவடிக்கை பயனர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை பாதிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மெட்டாவின் இந்த முடிவு பயனர்களின் தனியுரிமையை மீறும் வகையில் இருப்பதாக பயனர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களே இந்த அம்சத்தைப் பயன்படுத்துவதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது. அத்துடன் என்க்ரிப்ட் செய்யப்பட்ட சாட்களை பயன்படுத்துபவர்கள் மே 8க்கு முன் தங்களுக்கு தேவையான தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதிக்கும் என்பதால், பலரும் தங்கள் தரவை பதிவிறக்கம் செய்யத் தொடங்கியுள்ளனர். மேலும் பாதுகாப்பான மாற்று செயலிகளுக்கு மாறவும் ஆலோசிக்கப்படுகிறது.