நித்யானந்தா இறந்துவிட்டதாக கூறி அவரது சகோதரி மகன் சொன்ன தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையா? வதந்தியா? என்பது குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
திருவண்ணாமலையில் பிறந்த நித்யானந்தா, கர்நாடகாவிற்கு சென்று ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்தி வந்தார். அங்கு மிகவும் பிரபலமான இவர், பின்னர் உலகம் முழுக்க பிரபலமானார். வெளிநாட்டினர் பலரும் இவரின் சொற்பொழிவுக்கு அடிமையாகினர். இதனைத்தொடர்ந்து புகழ் மற்றும் பணம் கூரையை பிய்த்து கொட்டத் தொடங்கியது. ஆனால், சில காலங்களுக்கு பிறகு அவர்மீது விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. குறிப்பாக சீடர்கள் இவர்மீது பாலியல் புகார்கள் பதிவிட்டனர்.
இதனால், அவர் மிகவும் தேடப்பட்ட நபரானார். நித்யானந்தா இந்தியாவிலிருந்து தலைமறைவாகி, ஒரு தீவையே உருவாக்கினார். அந்தத் தீவுக்கு கைலாசா என்று பெயர் வைத்தார். இது ஒரு இந்துக்களுக்கான நாடு என்றும், தனி கரன்சி, பாஸ்போர்ட், கொடி ஆகியவற்றை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். தொழில் தொடங்க வருமாறு தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே அவர் டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருவதாகவும் , சில ஆண்டுகளாக படுத்தப் படுக்கையாகிவிட்டார் என்றும் செய்திகள் வந்தன. ஆனால், இதனை யாரும் உறுதி செய்யவில்லை. இதேபோல்தான் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இறந்துவிட்டதாக செய்திகள் வந்தன. ஆனால், அவர் அதை மறுத்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
இப்படியான நிலையில்தான் நித்யானந்தா உயிரிழந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் தெரிவித்திருக்கிறார். அவர் இறந்து 2 நாட்கள் ஆனதாகவும் தெரிவித்தார். இது உண்மையா இல்லை வழக்குகளிலிருந்து தப்பிக்க ஏப்ரல் ஃபூல் செய்கிறாரா என்ற சந்தேகம் வலுக்கிறது.
இந்த செய்தியை கைலாசா தீவு மக்கள் உறுதி செய்யவில்லை.
ஒருவேளை இந்தத் தகவல் உண்மையானால், இவரின் 4 ஆயிரம் கோடி சொத்து யாருக்கு சேரும் என்றும், அந்த தீவை இனி யார் வழிநடத்துவார் என்றும் தெரியவில்லை. இதுகுறித்தான சந்தேகங்கள் வலுக்கின்றன.