

இந்தியாவில் அஞ்சல் அலுவலக முதலீட்டிற்கு அடுத்து, பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி தான் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. அஞ்சல் மற்றும் எல்ஐசி முதலீடுகள் ஆகிய இரண்டிலும் ஏறக்குறைய வட்டி விகிதம் சமமாகவே இருக்கும்.
மியூச்சுவல் ஃபண்டைக் காட்டிலும் குறைவான லாபமே கிடைக்கும் என்றாலும், பாதுகாப்பான முதலீடு என்று ஒற்றைக் காரணத்திற்காகவே பொதுமக்கள் பலரும் அதிக அளவில் அஞ்சல் மற்றும் எல்ஐசி-யில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள மிகப்பெரிய மோசடியால், எல்ஐசி நிறுவனத்திற்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ராஜேஷ் மேத்தாவிற்கு சொந்தமான தங்க நகை ஏற்றுமதி நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், வெளிநாட்டுத் துணை நிறுவனங்கள் மூலம் ரூ.15.15 லட்சம் கோடிக்கும் மேல் இலலாத வருமானத்தை இருப்பதாக காட்டியுள்ளது. ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் காட்டிய வருமானம், ஒருங்கிணைந்த மொத்த வருமானத்தில் 99% வருமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படியெனில் இந்த நிறுவனத்தின் உண்மையான வருமானம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்பதை இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி கண்டுபிடித்துள்ளது. இந்த மெகா வருமான மோசடியில் ஈடுபட்ட ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது செபி.
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் தான் எல்ஐசி நிறுவனம் கிட்டத்தட்ட 10.80% பங்குகளை வைத்துள்ளது. இதன் காரணமாக எல்ஐசியில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் எல்ஐசியின் பணம் ஆபத்தில் இருக்கிறதா என்ற அச்சமும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த 2017-ல் 1.19% ஆக இருந்த எல்ஐசியின் முதலீடு, அடுத்த 10 வருடங்களுக்குள் 10 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. முதலீடு செய்வதில் தவறில்லை; ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களே முதலீடு செய்யாமல் ஒதுங்கிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில், எல்ஐசி மட்டும் இந்த அளவிற்கு ஒரு பெரிய தொகையை முதலீடு செய்தது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ராஜேஷ் மேத்தாவின் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் சுவிட்சர்லாந்து துணை நிறுவனமான வல்காம்பி, தங்கம் சுத்திகரிப்புக் கட்டணத்தை மட்டுமே வருமானமாகப் பெற்று வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்குச் சொந்தமான தங்கத்தின் ஒட்டுமொத்த மதிப்பையும், தங்களது சொந்த வருமானம் போல ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் கணக்கு காட்டியுள்ளதாக செபி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வருமான மோசடி காரணமாக ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள எல்ஐசி-யின் பணத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் இல்லாத வருவாயை இருப்பதாக காட்டியது மட்டுமே 99 சதவீதத்திற்கும் மேல் என்றால், வெறும் 1 சதவீதத்திற்கும் குறைவான வருமானத்தை வைத்துக்கொண்டு, இந்நிறுவனம் எல்ஐசி பொதுத்துறை நிறுவனத்தை ஈர்த்தது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது.
அதே நேரம் 10.80% பங்குகளை வைத்துள்ள எல்ஐசியின் முதலீட்டுப் பணம் எங்கே என்ற கேள்வி முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் எல்ஐசி முதலீடு செய்த பணம் அனைத்துமே பொதுமக்கள் மற்றும் சாமானியர்கள் முதலீடு செய்த பணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை எல்ஐசி-யின் பணத்திற்கு உத்திரவாதம் இல்லாமல் போனால், எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு அது மிகப் பெரிய பேரதிர்ச்சியாக இருக்கும்.
பாதுகாப்பான முதலீடு என்று தான் பொதுமக்கள் பலரும் எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால் எல்ஐசி நிறுவனமே ஒரு தங்க நகை ஏற்றுமதி நிறுவனத்திடம் சிக்கி கொண்டிருப்பதால், பொதுமக்கள் மத்தியில் முதலீட்டின் மீதான நம்பிக்கையே கரைந்து விடும்.
இருப்பினும் எதிர்கால வாழ்க்கைக்கு முதலீடு அவசியம் என்பதால், தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வது தற்போதைய சூழலில் பாதுகாப்பானதாக இருக்கும் என பொருளாதார ஆலோசகர்கள் கூறுகின்றனர்.