இஸ்ரோவில் இன்டர்ன்ஷிப் கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு!

இஸ்ரோவில் இன்டர்ன்ஷிப் கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (Indian Space Research Organization, ISRO, இஸ்ரோ) நம்முடைய இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி முகமாகும். இதனுடைய தலைமைப் பணியகமானது  பெங்களூருவில் அமைந்துள்ளது. இஸ்ரோவில் தற்போது சுமார்  16,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்திய அரசின் விண்வெளித்துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கி வருகிறது இஸ்ரோ. இஸ்ரோவில் பயிற்சிபெரும் வாய்ப்பானது ஒருவருக்கு கிடைப்பது என்பது மிகப்பெரிய விஷயம். அந்தவகையில் விண்வெளி துறையில் சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கான பொன்னான வாய்ப்பு இதோ!

இஸ்ரோ இன்டர்ன்ஷிப் யாருக்கானது?

இஸ்ரோ நிறுவனம் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆர்வம் அதிகமாக உள்ள மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘இன்டர்ன்ஷிப் திட்டம்’ மற்றும் ‘மாணவர்  பயிற்சித் திட்டத்தை’ சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம்   விண்வெளித் துறையில் தங்கள் ஆர்வங்களைத் தொடர விரும்பும் மற்றும் அனுபவத்தைப் பெற விரும்பும் மாணவர்களுக்குத் இது நல்லதொரு வாய்ப்பாகும்.

யாரெல்லாம் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்?

இஸ்ரோவின் இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ், இந்தியாவில் மட்டுமின்றி  வெளிநாட்டிலும், அறிவியல்/தொழில்நுட்பத்தில் துறைகளில், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து இளங்கலை (UG), முதுகலை (PG), மற்றும் Ph.D பயிலும் மாணவர்கள் தகுதியுடையவர்கள். இந்த இன்டர்ன்ஷிப் திட்டமானது குறிப்பிட்ட சில நாட்கள் வரை நடக்கும். மேலும் ஒருசில காரணங்களால் நீட்டிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது. இது அதிநவீன விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்த  அனுபவத்தைப் பெற மாணவர்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

என்னென்ன தகுதிகளின்கீழ் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்?

  • விண்வெளித் துறையில் இஸ்ரோவிற்குள் கல்வித் திட்டப் பணிகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் குறைந்தபட்சம் 60% அல்லது 6.32 CGPA பெற்றிருக்க வேண்டும்.

  • இந்தத் திட்டத்திற்கு மிகவும் உறுதியான மற்றும் கல்வியில் நன்கு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

  • ஆறாவது செமஸ்டர் முடித்த பொறியியல் மாணவர்கள், ஒன்றாவது செமஸ்டருக்குப் பிறகு உள்ள ME/MTech மாணவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்.

  • இறுதியாண்டு BSc/Diploma மாணவர்கள் மற்றும் ஒன்றாவது செமஸ்டருக்குப் பிறகு இருக்கும் MSc மாணவர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்.

  • அதுமட்டுமின்றி படிப்பை முடித்த PhD அறிஞர்களும் கூட இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வரவேற்கப்படுகிறார்கள்.

  • இவ்விரண்டு திட்டங்களுக்கான தேர்வு செயல்முறையும் மிகவும் துல்லியமாக இருக்கும். நிறுவப்பட்டுள்ள  விதிமுறைகளின்படி விண்ணப்பங்கள் அந்தந்த மையங்கள் அல்லது பிரிவுகளால்  ஆராயப்படும்.

இதையும் படியுங்கள்:
மொபைல்போனை கணினியுடன் இணைக்கும் தந்திரம்... அட, ரொம்ப ஈசிங்க!
இஸ்ரோவில் இன்டர்ன்ஷிப் கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு!

பயிற்சி எத்தனை நாள் வரை நடக்கும்?

இத்திட்டத்தின் கால அளவானது நம்முடைய படிப்பைப் பொறுத்ததுதான். இது குறைந்தபட்சம் 45 நாட்கள் வரை நடக்கலாம். மேலும் பயிற்சி  நீடிக்கும் பட்சத்தில் 30 மாதங்கள் வரைகூட  நடக்கலாம்.

இஸ்ரோவின் சான்றிதழைப் பெறலாமா?

இத்திட்டத்தின்கீழ் தேர்வாகும் பயிற்சியாளர்கள் மற்றும் திட்டப் பயிற்சியாளர்களுக்கு எந்தவிதமான ஊக்கத்தொகை அல்லது நிதி உதவி வழங்கப்படமாட்டாது. ஆனால் குறிப்பிட்ட பகுதிகளில் அந்தந்த  நிபுணர்களுடன் பயிற்சியில் தீவிரமாக ஈடுபடும் மாணவர்கள் இஸ்ரோவிலேயே தொடர்ந்து பணியாற்ற மிகச்சிறந்த வாய்ப்பைப் பெறுவார்கள்.

அதோடு கூடுதலாக, இன்டர்ன்ஷிப் அல்லது ப்ராஜெக்ட்டை வெற்றிகரமாக முடித்தவுடன், இஸ்ரோவின் சான்றிதழ்  அவர்களுக்கு வழங்கப்படும்.

logo
Kalki Online
kalkionline.com