உலகில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகள் தங்களது கடல்வழி வர்த்தகத்தில் பெரும் தடைகளையும், கடுமையான பொருளாதார இழப்புகளையும் எதிர்கொண்டு வருகின்றன.
அதில் ஒன்றுதான் நமது நாட்டில் விளையும் உலக அளவில் புகழ் பெற்ற மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய ஜப்பான் தடை விதித்துள்ள கவலை அளிக்கும் செய்தி. இந்த தடை ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட கடல் வணிக நெருக்கடி காரணமாக ஏற்பட்டது அல்ல என்ற கருத்து நிலவுகிறது.
தர நிர்ணயங்களில் கடுமையான குறைபாடுகள் கண்டறியப்பட்டதன் காரணமாகவே, இந்திய மாம்பழங்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கான ஜப்பானின் இந்த கடுமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஏற்றுமதியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானிய அதிகாரிகள் ஆய்வுக்காக இந்தியப் பதப்படுத்தும் மையங்களுக்குச் சென்ற போது மாம்பழங்களைக் கிருமி நீக்கம் செய்யப் பயன்படுத்தப்படும் புகைமூட்டும் செயல்முறையிலும் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக (fruit fly) பழ ஈ போன்ற பூச்சிகள் தொடர்பான பாதுகாப்பு தரநிலைகளில் குறைபாடுகள் இருப்பதாக ஜப்பான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் இதற்கு முன்பும் 1986ல் இந்திய மாம்பழங்களுக்கு பழ ஈக்கள் அச்சுறுத்தல் காரணமாக தடை விதித்திருந்தது. சுமார் 20 ஆண்டுகள் கழித்து 2006ல் அந்தத் தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய மாம்பழங்கள் மீதான குறைபாடுகள் கண்டறியப்பட்ட நிலையில் மார்ச் 25 அன்று அல்லது அதற்குப் பிறகு இந்தியாவால் வழங்கப்பட்ட ஆய்வுச் சான்றிதழ்களைக் கொண்ட எந்த மாம்பழ ஏற்றுமதியும் ஜப்பானுக்குள் அனுமதிக்கப்படாது என்று யோகோஹாமா தாவரப் பாதுகாப்புச் சங்கம் வெளியிட்ட ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கின்றன. மேலும் டோக்கியோவின் உயர் அதிகாரிகள் ஒப்புதல் தரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தத் தடையால் இந்தியாவின் பிரபல ஏற்றுமதி மாம்பழ வகைகளானஅல்போன்சோ,கேசர், லங்க்ரா, பங்கனப்பள்ளி போன்றவை ஜப்பான் சந்தைக்கு அனுப்பப்படுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தியாவில் இருந்து வரும் புதிய மாம்பழ இறக்குமதிக்கான இந்தத் தடை தற்காலிகமானது என்றாலும் இந்த சீசனுக்கான இறக்குமதிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் மாம்பழ உற்பத்தியாளர்களுக்கு இந்தத் தடை கவலை தருகிறது எனலாம். காரணம் ஜப்பான் ஒரு பிரீமியம் சந்தை என்பதால் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.