

காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளில் அதிவேகமாகப் பரவி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கொடிய எபோலா வைரஸின் "புண்டிபுக்யோ" ரகத்திற்கு எதிராக புதிய தடுப்பூசியை கண்டுபிடித்து ரஷ்ய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
எபோலா வைரஸின் புதிய திரிபுக்கு(new strain) எதிரான புதிய தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளனர். முன்னதாக கண்டறியப்பட்ட இந்த புதிய வகை எபோலா வைரஸுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இல்லாத நிலையில், ரஷ்யாவின் இந்த மருத்துவ முன்னேற்றம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரஷ்யாவின் இந்தப் புதிய மருத்துவ கண்டுபிடிப்பு உலகளாவிய எபோலா மரணங்களை தடுக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எபோலா என்பது ஒரு வைரஸ் நோயாகும். இது முதன்முதலில் 1976ல் காங்கோவில் கண்டறியப்பட்டது. திடீர் காய்ச்சல், கடுமையான சோர்வு, தசை வலி, தலைவலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் ரத்தப்போக்கு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். தற்போது புண்டிபுக்யோ எனப்படும் புதுவகை எபோலா வைரஸ் காங்கோவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் தெற்கு சூடான் உட்பட அண்டை நாடுகளுக்கும் பரவும் அபாயத்தில் உள்ளது.
உலக சுகாதார அமைப்பு(WHO) காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் ஏற்பட்ட இந்த நோய்ப் பரவல்களை இம்மாதம் 17ஆம் தேதி உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக பரிசோதிக்குமாறும், புண்டிபுக்யோ வைரஸ் கண்டறியப்பட்ட இடங்களுக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வேகமாகப் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய புதிய வகை எபோலா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தத் தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் தீவிர முயற்சியால் இந்தத் தடுப்பூசி உருவாக்கப்பட்டு, சோதனைகளில் நல்ல பலனைத் தந்துள்ளது. உலக அளவில் எபோலாவுக்கு எதிரான சிகிச்சைகள் குறைவாக இருக்கும் சூழலில், இந்தப் புதிய தடுப்பூசி எதிர்காலப் பெருந்தொற்றுகளைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.